ஜெயலலிதா மோடிக்கு எழுதும் காதல் கடிதங்களால் எதனைச் சாதிக்கமுடியும் என்ற தலைப்பில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.
தமிழக முதல்வர் மற்றும் இந்தியப் பிரதமர் தொடர்பில் வெளியான கட்டுரைக்காக பாதுகாப்பு அமைச்சு மன்னிப்பு கோரியமை தொடர்பில் இந்திய அரசாங்கம் திருப்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரை பின்னர் பாதுகாப்பு இணையத்தளத்தில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளது.
கோமாளிகளும் - பாசிட்டுகளும் தங்கள் தங்கள் சூழலில் இருந்து வெளிப்படுத்தும் அரசியல் மொழி இதுவாகும்.
அரசியல் மொழியில் சொன்னால் தமிழ் மக்களுக்காக போராட வக்கற்றவர்களே இவர்கள், என்பதைத்தான் இலங்கை அரசு எள்ளி நகையாடி இருக்கின்றது. தமிழக மக்களை ஏமாற்றி பிழைக்கும் பிழைப்புவாதம் தான், கடிதம் எழுதும் மோசடி.கடிதங்கள் எழுதியே தமிழ் மக்களை கொன்று கேலிக்கூத்தாக்கும் அரசியல் நகைச்சுவை தான், காதல் கடிதங்களாக பாசிட்டுக்களுக்கு புரிகின்றது.
ஆக காதல் உணர்ச்சியைக் கூட புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அதைக் கொச்சைப்படுத்துமளவுக்கு, மனிதத் தன்மையற்றவர்களே தாங்கள் என்பதை பாசிட்டுகள் தங்கள் மொழியில் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
கடிதம் எழுதியே பல இலட்சம் பெறுமதியான சர்வதேச விருதைப்பெற்று, அதைத் தனது சொத்தாக்கிய ஆனந்தசங்கரி வரிசையில், தமிழக முதல்வர்கள் தமிழ் மக்களைச் சொல்லி முதலை கண்ணீர் வடிப்பதை வெளிப்படுத்தவே கடிதங்களை எழுதுகின்றனர். தமிழ் மக்களைச் சொல்லிப் பிழைக்கும் வக்கிரங்களே கடிதங்கள் மூலம் தொடர்ந்து நடந்தேறுகின்றது.