வெள்ளை நிற-இன வெறிக் கொள்கையை அமுல்படுத்த முனையும் அவுஸ்திரேலியாவானது, இலங்கை - இந்தியாவுடன் கூட்டுக் கொள்கையை முன்னெடுக்கின்றது. அண்மையில் சர்வதேசக் கடலில் வைத்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவால் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளின் ஒரு பகுதியை இலங்கைக்கு நாடு கடத்தியவர்கள், மிகுதிப் பேரை இந்தியாவுக்கு நாடுகடத்தும் கூட்டுச் சதி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
யுத்தத்தை நடத்தி மக்களைக் கொன்றதாகட்டும், அகதிகளை நாட்டுக்கு நாடு கடத்தி கொடுமைப்படுத்துவதாகட்டும் மூலதனத்தைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்ட அரசுகள் கூட்டாக செயற்படுகின்றதை, அகதிகள் விவகாரம் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது.
பிரிட்டனில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு கொள்ளையடிக்கச் சென்று, அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை அழித்தவர்களின் பரம்பரை வழி வந்த மூலதன ஆட்சியாளர்கள், அகதிகளை இன-நிற வெறியுடன் இன்று நாடு கடத்துகின்றனர்.