"மார்க்கியம் - கம்யூனிசம் - வர்க்கப்போராட்டம்" லேபலிலும், "இடதுசாரியம்" என்ற முகமூடியிலும் அரசியல் செய்து பிழைக்கும் விக்கிரமபாகு, உழைக்கும் மக்கள் மத்தியில் எந்த அரசியலையும் நடைமுறையையும் கொண்டிருப்பதில்லை. மாறாக தனிப்பட்ட பிழைப்புவாதத்துக்காக சந்தர்ப்பவாதத்தை கையாளுபவர். இந்த வகையில் லெனின் வர்க்கப் போராட்டத்தை நடத்த முன்வைத்த "சுயநிர்ணயத்தை", தன் தனிப்பட்ட தேவைக்காக திரித்து வரும் அவர், அதை வைத்து வாக்குக்கோரப் போவதாக அறிவித்துள்ளார்.
இன்று சிங்கள இனவாத வாக்குகளை அரசுடனும், எதிர்க்கட்சியுடனும் போட்டியிட்டு அணிதிரட்ட முடியாது. ஆனால் தமிழ் இனவாத வாக்குகளை பெற முடியும் என்பதால், தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினையாக புரிந்து கொண்ட "சுயநிர்ணயத்தை" தன் பிழைப்புவாதத்துக்காக முன்வைத்து, தன்னை இடதுசாரிய பொது வேட்பாளராக்க கோருகின்றார். நடைமுறையற்ற கோட்பாட்டு சிங்கள இடதுசாரிகளை சரிக்கட்ட, "சுயநிர்ணயம்" என்ற முகமூடியை போட்டுக்கொள்கின்றார்.
தமிழ்-சிங்கள் மக்களுக்கு பிரிவினையாக புரிந்து கொள்ள வைக்கப்பட்ட "சுயநிர்ணயத்தையே" விக்கிரமபாகு மட்டுமல்ல, "சுயநிர்ணயத்தை" சொல்லி கோட்பாட்டு அரசியல் நடத்தும் தமிழ் "போலி இடதுசாரியம்" வரை விதிவிலக்கின்றி முன்வைக்கின்றது. உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்தி முன்னெடுக்கும் வர்க்கப் போராட்டத்தையல்ல.