தேசிய மீனவர் இயக்கம் பத்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிட்ட ஆர்ப்பாட்டம், தடை செய்யப்பட்ட நிலையில், அது கண்டனக் கூட்டமாக இன்று நடைபெற்றது.
அரசு இதை தடுத்து நிறுத்த நீதிமன்றம், பொலிஸ் .. என்று எல்லாவகையான ஆட்சி அதிகார உறுப்புகளை பயன்படுத்திய போதும், அதை மீறி மக்கள் ஒன்றிணைந்து வருகின்றனர். அரசு இன்று
1. மீனவர்கள் கோரிக்கைகளை முன்வைப்பதை மட்டும் எதிர்க்கவில்லை
2. தமிழ் - சிங்கள மொழி பேசும் மக்கள் ஒன்றிணைவதையும் கூட எதிர்க்கின்றது
யுத்தத்துக்கு முந்தைய இனரீதியான வேலியை தன் இராணுவத்தைக் கொண்டு போட்டு வைத்திருப்பதும், அதைக் கொண்டு தெற்கு மக்கள், வடக்கு சென்று போராடுவதை தடுப்பதும், வடக்கு மக்கள் தெற்கு சென்று போராடுவதை தடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகின்றது.
இதை மீறி வடக்கு - தெற்கு மக்கள் ஒன்றிணைந்து போராடுவது, அதை தடுப்பதுமான இரு முனை போராட்டமாக அரசியல் பரிணமித்து வருகின்றது. மக்கள் தங்களை தாங்கள் தங்கள் வாழ்வுடன் இனம் - மொழி - மதம் கடந்து புரிந்து வருவது, ஆளும் வர்க்கத்துக்கு சவால் மிக்க ஒன்றாக மாறி வருகின்றது. எல்லா இனத்தைச் சோந்த இனவாதிகளுக்கும் இருப்புக் கொள்ள முடியாத, இதை கருவறுக்கும் எதிர்ப்பாக மாறி வருகின்றது. தேசிய மீனவர் இயக்கத்தின் இன்றைய போராட்டம் மட்டுமல்ல இன்னும் இன்னும் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராடுவதே நாளாந்த செய்தியாக மாறி வருகின்றது. இது தான் நாளைய வரலாறு.