முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் திமுத்து ஆட்டிகல மீது யாழ்ப்பாணத்தில் வைத்து கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சுதந்திரத்திற்கான மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அவற்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும் போது யாழ்ப்பாண நல்லூர் கோவிலுக்கு அருகாமையில் வைத்து இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது சம்பந்தமாக நாம் விசாரித்த போது, யாழ். நல்லூரில் வாகனத்தின் மீது கழிவு எண்ணெய் மற்றும் சாணம் கரைக்கப்பட்ட தண்ணீர் அகியவற்றைக் கலந்தே தமது வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், தம்மைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் இந்தத் தாக்குதலை நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து யாழ் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் இவர்களையும் பாதுகாப்பாக திரும்பி செல்லும்படியும் தெரிவித்துள்ளனர்.
முன்னிலை சோஷலிச கட்சியின் மாநாடு நடைபெறுவதற்கு சில நாட்களே இருந்த நிலையில் அரசாங்கத்தின் உத்தியோக பற்றற்ற காடையர்களினால் அவர் கடத்தப்பட்டு தேசிய மற்றும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக விடுதலை செய்யப்பட்மை குறிப்பிடத்தக்கது.
மேற்படி கழிவு எண்ணெய் வீச்சு அரசாங்கத்துக்குத் தெரியாமல் நடந்திருக்க முடியாதென முன்னிலை சோஷலிச கட்சி கூறுகிறது.