சட்டவிரோத கைதுகளை உடனடியாக நிறுத்தக்கோரி கொழும்பு, மட்டக்குளியில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மக்கள் போராட்ட இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 300ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக 70 பொலிசார் வரையில் வந்திருந்ததாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டம் ஆரம்பித்த நேரத்திலிருந்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்தக்கோரி பொலிசார் இடையூறு செய்துள்ளனர். இதனை கவனத்திற்கொள்ளாத ஆர்பாட்டக்காரர்கள் ஆர்பாட்டத்தை தொடர்ந்து நடத்தியுள்ளனர்.
சிறிதுநேரத்தின் பின்னர் பொலிசார் தலையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை பலவந்தமாக கலைத்துள்ளனர். மட்டக்குளி பிரதேசத்தில் அண்மைக்காலத்தில் நால்வர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதோடு, கடத்தப்பட்ட ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் வைத்து கடத்தப்பட்டுள்ளார். இதை நேரில் கண்ட அவரது மனைவி எனது கணவரை வெள்ளை வானில் கடத்திச்செல்கின்றார்கள் என்று பொலிசாரிடம் கூறிய போதும் அதை அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
இவ் ஆண்டில் மட்டும் 76பேர் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள் : வீரகேசரி