முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பா பிலவு பகுதியில் மக்களை மீளக் குடியேறவிடாது தடுத்து வரும் இராணுவம் அப்பகுதியில் பாரிய இராணுவ முகாம் ஒன்றைஅமைப்பதற்கு முற்பட்டுள்ளது. இதற்கு எதிராக, மக்களை மீளகுடியமர்த்துமாறும் ஏனைய பகுதியகளில் மீளக் கூடிய மக்களுக்குரிய வசதிகளை செய்து கொடுக்குமாறும் முல்லைத்தீவு கடலோரங்களில் மீனவர்களை அச்சுறுத்தி வரும் இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்தும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (21.09.2012) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பின் போரில் இடம்பெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆண்களும் பெண்களுமாக பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நடுவே பின்னால் இருந்து இனம்தெரியாதோர் துர்நாற்றம் வீசிய சேற்று பொதிகளை வீசினர். இருந்தும் மக்கள் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தனர். முடிவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல், நவ சமசமாஜ கட்சியின் செயலாளர் விக்கிரமபாகு கருணாநாயக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், வினோநோதாரலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சே. கஜேந்திரன் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் இயக்க பிரதிநிதிகள் ஆகியோர் உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்ட முடிவின் பின் யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னர் பா. உறுப்பினர் கஜேந்திரன் விக்கிரமபாகு கருணாநாயக்க ஆகியோர் சென்ற வாகனங்கள் இனந்தெரியாத நபர்களின் கல்வீச்சு தாக்குதல்களுக்கு இலக்காகின.
நன்றி
பு.ஜ.மா.லெ.கட்சி