கடத்தப்பட்டோர், காணாமல்போனார் மற்றும் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டோருக்கான நியாயம் வேண்டி, கடத்தல்கள் மற்றும் கைதுகளுக்கு எதிராக மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 11மணியளவில் யாழ். நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
லலித், குகன் ஆகியோர் காணாமல்போன சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்று யாழ். நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் யாழ். நகரில் கூடிய மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை தொடர்ந்து எழுப்பினர்.
மேலும் வடக்கில் நிலையான ஜனநாயகத்தை ஏற்படுத்தும் படியும், இனங்களுக்கிடையிலான ஜக்கியத்தை கட்டியெழுப்பும் படியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தொடர்ந்தும் கோசங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இதேவேளை, குறித்த போராட்டத்தில் சுமார் 500ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். பெருமளவு பொலிஸாரும், இராணுவப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 1மணிநேரத்திற்கும் மேலாக வீதிப் போக்குவரத்து யாழ். நகரில் முற்றாக ஸ்தம்பித்துப்போனது. எனினும் சுமார் 12.30மணியளவில் ஏற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்ட போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
எனினும், இதுபோன்ற போராட்டங்கள் எதிர்வரும் காலத்தில் மிகவும் விஸ்தரிக்கப்பட்டளவில் நாடளாவியரீதியில் நடைபெறும் எனவும் அவர்கள் அங்கு தெரிவித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.