தனிமனிதன் விரும்பியவாறு வழிபடும் உரிமையை மறுத்து, இப்படித்தான் நீ வழிபட வேண்டும் என்பது பாசிசம். அதன் போது இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதும் கூட பாசிசம். இப்படி பாசிசத்துக்கு பல முகமுண்டு. பாசிசம் தன்னை மூடிமறைக்க இந்து தமிழ் கலாச்சாரம், அதன் ஒழுக்கம் என்று வேசம் போட்டுத்தான், தன்னை மக்கள் முன் இட்டுச்செல்லும். மகிந்த பாசிசமோ இன்று தன்னை தமிழ்மக்கள் மத்தியிலும் அரசியல் நிறுவனமாக்க, இந்துப் பாசிட்டுகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.
மகிந்தவும் – ஈ.பி.டி.பி கும்பலும் தங்கள் அதிகாரம் மூலம் வென்ற யாழ் மாநகர சபையின் துணையுடன், யாழ் இந்து பாசிட்டுகளும் கூட்டாக இணைந்து மக்களுக்கு விதிகள் போடுகின்றனர். இப்படி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் உடை பற்றிய, புதிய நிலப்பிரபுத்துவ கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். புலிகள் முதல் கூட்டமைப்பு வரை உடன்பாடு கொண்ட, இந்து பாசிச தமிழ் ஒழுக்கவாதிகளின் வக்கிரத்தை, மகிந்தா தன் கையில் ஒரு ஆயுதமாக எடுத்துள்ளார். சமூகத்தை மகிந்த சிந்தனை, இப்படியும் தன் பின்னால் பாசிசமயமாக்குகின்றது.