தமிழக மீனவர் படுகொலை என்பது, எல்லை தாண்டுவதாலான ஒரு படுகொலையல்ல. இந்தியா கடல் எல்லைக்குள்ளும், படுகொலைகள் நடந்திருக்கின்றது. ஏன் இது இரு நாட்டு மீனவர் சார்ந்த முரண்பாட்டுக்குள்ளான ஒரு படுகொலையுமல்ல. இதனால் மீனவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் இல்லை என்று அர்த்தமல்ல.
இது போல் இன்று பேசப்படுவது, வெறும் மீனவர் படுகொலை பற்றியதல்ல. எல்லை கடந்த மீன்பிடி பற்றியும், எப்படி மீன்பிடிப்பது என்பது பற்றியும், யார் மீன்பிடிப்பது என்பது பற்றியதுமான பல தொடர் விடையங்கள்.
இதில் ஈழ தமிழினவாதம் முன்னிறுத்துகின்ற குறுகிய இனவாத அரசியல் முதல் அதன் திரிப்பு உள்ளடங்கிய வழியில், மார்க்சிய லெனினிய இயக்கங்கள் பின்பற்றுகின்ற கொள்கைகளும் கூட இங்கு விவாதத்துக்கு உள்ளாகின்றது. இலங்கை - இந்திய மீனவர்கள் நலன்கள் மறுக்கப்பட்டு, குறுகிய ஈழ அரசியல் இங்கு இதற்குள் புகுத்தப்படுகின்றது.
படுகொலைக்கான நோக்கங்கள், புலி இருந்த காலத்தில் இருந்து இன்று மாறுபட்ட காரணங்களை உள்ளடக்கியது. இப்படியான நிலையில், இதற்கு எதிரான போராட்டங்களும், விளக்கங்களும் கூட குறுகிய அரசியல் சார்ந்தது. ஈழ தமிழினவாத விளக்கங்கள், மீனவர் நலன் சார்ந்ததல்ல. அது குறுகியது. அனைத்தையும் அதற்குள் குறுக்கிக் காட்டுகின்றது.