ஏற்றுமதிச் சந்தையைக் கட்டுப்படுத்திய ஏகாதிபத்தியம், மூன்றாம் உலக நாடுகளின் தலைவிதியை பலதுறையில் முடமாக்கியது. சர்வதேச சந்தையில் வர்த்தகப் பொருட்களுக்குத் தேவையான ஆதாரப் பொருட்கள், 1979இல் 40.5 சதவீதமாக இருந்து. இது 1987இல் 28.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. அதாவது மூலப் பொருட்களின் விலை வீழ்ந்து, அதனிடத்தில் விலை அதிகம் கொண்ட உற்பத்திப் பொருட்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. 1980க்கும் 1986க்கும் இடையில் ஆதாரப் பொருட்களின் விலை 30 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டது. சில மூலாதாரப் பொருட்களின் விலை கடந்த 50 ஆண்டுகளுக்கு முந்திய அடிமட்ட விலைக்கு வீழ்ச்சி கண்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பான தேசங்களின் வளர்ச்சியை, இதன் மூலம் ஏகாதிபத்தியம் பல்வேறு வழிகளில் தடுத்து நிறுத்தின. சொந்த மக்களைப் பற்றி அக்கறைப்படாத சந்தைப் பொருளாதாரம் என்ற தேசிய கூக்கூரலை, குரல் வளையில் நெறிக்கப்பட்ட நிலையில் ஏகாதிபத்தியங்களால் சிலுவையில் அறைப்பட்டன. உயிர்த்தெழும் அனைத்து வாய்ப்புகளையும், இந்தச் சமூக அமைப்பில் இல்லாது ஒழித்தன.