Language Selection

பி.இரயாகரன் - சமர்

இன்றுள்ள நிலையில் புலிகளுக்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து வெறுமனே அம்பலப்படுத்தல்களை மட்டும் செய்தால் போதாது, புலியினை போராட்டக்களத்தில் இருந்து அகற்றி புதிய தலைமையை மக்கள் முன் கொண்டுவர வேண்டுமாயின், முதலில் உலகம் பூராகவும் பரவிக்கிடக்கின்ற தேசபக்த சக்திகளிடையே சரியான விவாதங்களிற்கு ஊடாக பொது அரசியல் வழியொன்று கண்டுபிடிக்கப்படல் வேண்டும். இது பிரதானமானது. நான் இன்று பல போக்குகளை காண்கிறேன்.

(1) வெறுமனே புலி எதிர்ப்பு

(2) பிழையான படுபிற்போக்கான அரசியல் கருத்துக்கள்

(3) சரியானதை தேடிக்கொண்டு இருப்பவர்கள் (இவர்களிடமும் பல தவறான கருத்துக்களும் மாறுபட்ட பார்வைகளும்)

நான் நினைக்கிறேன், புலிகளை அம்பலப்படுத்தல் மட்டும் எமது தேச விடுதலையை பெற்றுத்தராது. ஏனென்றால் ஸ்ரீலங்கா இனவாத அரசின் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு ஆயுத ரீதியில் புலிகள் மட்டுமே முகம் கொடுப்பதால், இந்த அம்பலப்படுத்தப்படும் உண்மைகள் மக்களிற்கு புரிந்தாலும் புலிகளின் போராட்டத்தலைமையை மக்கள் நிராகரிக்க முடியாத நிலையின்று நாட்டில்.

 

எனவே எம்முன்னுள்ள உடனடிப்பணி ஒருவர் கருத்துக்கு, மற்றவர்கள் மதிப்பளித்து ஊன்றிக்கவனித்து பலத்த விவாதங்கள் ஊடாக முதலில் சரியான அரசியல் மார்க்கம் கண்டுபிடிக்கப்படல் வேண்டும். அதற்கு முதலில் தோழர்களே மற்றவர்களின் கருத்துகளுக்கு உதாசீனம் செய்யாது, சொற்பதங்களை கேலியாக குறிப்பிடாமலும், அவை பற்றிய விவாதங்களை தேச விடுதலைப் போராட்டத்தில் உண்மையான விசுவாசம் இருந்தால் நடத்துவது இன்று அவசியமானது.

 

அதன் பின் பொதுவான உடன்பாடு உடையவர்கள் தத்தமது அரசியல் கருத்துக்களின் கீழ் அமைப்பாக திரண்டு எதிர்காலத்தில் உண்மையான மக்கள் விடுதலை இயக்கம் ஒன்றிற்காக தொடர்ந்தும் விவாதிப்பதுடன், தனித்தனியாக, நட்புரீதியாக ஆயுதமேந்தி புலி ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக போராடலாம்.

 

இன்றைய போராட்டத்தில் (தமிழீழ தேசிய விடுதலைப் போரில்) நீங்களும், நானும் விரும்பியோ விரும்பாமலோ புலி தான் தமிழ் மக்களின் தேசிய இனவடிப்படையை கட்டிக் காக்கும் போரில் ஈடுபட்டுள்ளது. புலி இன்னமும் அரசுடன் சமரசத்துக்கு போகலாம் என்ற நிலையுள்ள போதும் இல்லை என்றுமில்லை. தமிழ் பிரதேசம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை இன்னமும் கைவிடக்கூடிய நிலையில் இருப்பதாகவில்லை. புலிகள் மக்களில் தங்கியில்லாமல், துப்பாக்கியிலும் புதிய புதிய ஆயுதங்களின் வருகையிலும் பழிக்குப்பழி, சிங்களப் பிரதேசத்தில் குண்டு வெடிப்பு, சில தலைவர்களை கொன்றால் பிரச்சனையை வெல்ல முடியும் என்ற பிற்போக்கு அரசியலை கொண்டுள்ளவரை, தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கு தலைமை தாங்கும் திராணியில்லை. ஆனால் தமிழ் மக்களின் தேசியத்தன்மை, (1) பாரம்பரிய பிரதேசம் பறிப்பதற்கு எதிராகவும் (2) தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு பதில் பம்மாத்து மாகாணசபைக்கு எதிராகவும் இப்படிப்பல, குறிப்பாக தமிழ் மக்களை கொன்று குவிப்பதற்கு எதிராகவும் ஒரு தற்காப்பு யுத்தத்தை மட்டும் பலமாக இன்று நடத்தி கொண்டிருக்க முடியும்.

 

மேலும் நீங்கள் இதழில் எழுதியது, சி.ஐ.ஏ புலிகளிற்கு உதவுகின்றது. புலிகள் அமெரிக்காவின் (சி.ஐ.ஏ) யின் கைக்கூலி.

 

தமிழீழப்போராட்டத்தில் தோன்றிய அனைத்து இயக்கங்களுமே குட்டி பூர்ஷ்வா இயக்கங்கள் தான் என்பது எமது கருத்து. அதில் சில இயக்கங்கள் பாட்டாளி மக்களின் விடுதலை தான் உண்மையான விடுதலையை முழுமக்களுக்கும் பெற்றுத்தரும் என்றுணர்ந்து பாட்டாளி வர்க்கக் கட்சியான கம்யுனிஸ்ட் கட்சியை கட்டும் நோக்கில் வேலை செய்தாலும், அவற்றிடையே சரியான தத்துவார்த்த அறிவின்மை, வேலைமுறை இன்மை காரணமாக அவையும் குட்டிபூர்ஷ்வா இயக்கத்திற்கு மேல் வளர்ந்து பாட்டாளி வர்க்க கட்சியாக முடியாமல் சிதைந்து போயின. சில இந்தியக் கைக்கூலியாயின. புலி முதலில் குட்டி பூர்ஷ்வா இயக்கமாகத் தோன்றினாலும் பின் அது பூர்ஷ்வா இயக்கமாக வளர்ந்து வந்தது. (தேசிய முதலாளியா, தமிழ் தரகு முதலாளியா என்பது விவாதத்துக்குரியது. அது தமிழ் இனத்தின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் தன் தலைமையை வலிந்து ஆயுதத்தால் திணித்துக்கொண்டது. பூர்ஷ்வா இயக்கம் மக்கள் அரசியல் மயப்படுவதை என்றுமே அங்கீகரித்ததில்லை. புலியும் அதற்கு விதிவிலக்கில்லை. எனவே அது தமிழ் தேசிய எழுச்சியடைந்த இளைஞர்களைக் கொண்டு ஒரு இராணுவத்தை கட்டிக் கொண்டு தமிழீழத்தின் ஆட்சியதிகாரத்தை தன் கையில் எடுப்பதற்காக போராடிக்கொண்டு வருகிறது. இன்று நடக்கின்ற பிரதான தமிழீழம் என்கின்ற போரில் புலிகள் (பூர்ஷ்வா) தமிழ் மக்கள் சார்பில் போராடுகின்ற ஒரு அமைப்பு என்பதனை யாரும் நிராகரிக்க முடியாது.

 

அப்படி நிராகரிப்பின், தமிழ் மக்கள் மத்தியில் பல வர்க்கங்கள் உண்டு என்பதனை நிராகரிப்பதாகவே அமையும். எனவே இன்று நடக்கும் இந்த விடுதலை யுத்தத்தில் புலிகள் போராட்டத்தில் ஒரு நேச அணி. ஆனால் இந்தப் புலிகள் ஆட்சியதிகாரத்திற்கு வர எந்தப் பிற்போக்கு கும்பலிடமும் உதவி பெறுவார்கள். இது அவர்களின் குணாம்சம்.

 

மேலும் தமது அரசியலில் குழம்பிக்கொண்டு இருப்பார்கள். எதனையும் தெளிவாக முன் வைக்கமாட்டார்கள். இன்று மூன்றாம் உலக நாடுகள் பூராவும் மக்கள் விடுதலை யுத்தங்கள் ஏகாதிபத்திய கூலி அரசுகளிற்கு ஏதிராக நடத்திக் கொண்டிருக்கின்றனர். உலகில் ஒரு கம்யூனிச நாடும் இன்று இல்லாமையால், சரியான திசைவழி இன்றியும், கம்யூனிசம் பற்றிய தெளிவின்மையாலும் இப்போராட்டங்கள் திசை இலக்கு இன்றி போய் கொண்டுள்ளன. இது ஏகாதிபத்தியத்திற்கு நல்ல வாய்ப்பாக உள்ளது. அது இரு வழிகளை கைக்கொள்கிறது.

(1)அரசிற்கு சகல உதவிகளையும் செய்து போராட்டத்தை நசுக்க முயல்கிறது.

 

(2)போராடும் சக்தியில், மக்களை தங்கியிராத சக்திகளை பல வழியிலும் வளர்த்தெடுத்து, புரட்சிகர அமைப்புக்களை அழித்தொழிப்பது சில சமயம் போராட்டம் வெல்லப்படுமானால் ஆட்சியதிகாரத்திற்கு வருபவர்களாக இவர்களை வளர்ப்பது. உதாரணம் எரித்திரியா.

 

எமது தேசத்தில் நானும் நீங்களும் விரும்புகின்ற கம்யூனிச அமைப்பு தோன்றுவதற்கு, தமிழ் ஈழம் முன் நிபந்தனையாக உள்ளது. அதன் பின் ஜனநாயக அரசு ஒன்று ஆட்சிக்கு வந்து, அது பரந்துபட்ட மக்களின் ஜனநாயக உரிமைக்காக போராட்டம் நடத்த வேண்டும் (இது தான் பாட்டாளி வர்க்க ஜனநாயகம் என்று கருதுகிறேன்.) அதன் பின் சோசலிசப் போராட்டம், இப்படியே தொடர்ந்து கம்யூனிசப் போராட்டம் வரை செல்லுமென்பது என் கருதுகோள்.

 

முன்னிபந்தனையான தமிழீழம் என்பதில் பல வர்க்க அமைப்பும் போராடுவது தவிர்க்க இயலாதது. இதில் ஏகாதிபத்தியம் தன் சார்பு நிலை எடுக்கக்கூடிய அமைப்பை பலம் பொருந்தியதாக வளர்த்து விடுவது தவிர்க்க முடியாதது.

 

எனவே நாம் வெறுமனே கூச்சலிட்டுப் பயன் இல்லை. மாறாக உலகப் புரட்சிகர அமைப்புக்களுடன் நட்புறவுகளைப் பேணி ஆழமான விவாதங்களை படிப்புக்களை நட்புச்சக்தி, போர் வழி, மார்க்கம் என்பவற்றை முன்வைத்து பல மடங்கு கஸ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும். எனவே முதலில் பிரதான பணியாக:

 

(1)  போராட்டம் பிரதானமாக என்ன முரண்பாட்டைக்கொண்டுள்ளது.

 

(2)  யார்(எந்தவர்க்கம்) எதிரிகள் ? யார் நண்பர்கள்?

 

(3)  ஆயுதப் போராட்டமா? இல்லையா?

 

(4)  எமது அரசியல் கோட்பாடு, முழக்கம், வேலைமுறைகள் என்ன!

 

என்பது பற்றிய விடைகளைக் காண அனைத்து சஞ்சிகைகளும், தமது முழுவேலையாக கருதி செயற்பட வேண்டும். அதனை விட்டு நான்கு சிறு கதைகள், இரு கவிதைகள், ஒரு மொழிபெயர்ப்பு கதை எழுதி வெளியிடுவதால், எமது போராட்டம் முன்நோக்கி செல்ல மாட்டாது.

 

மேலுள்ளவை பிழை என்று கூறவில்லை. சரியான அரசியல் மார்க்கமின்றி, இந்த கலை, கலாச்சாரம், இலக்கியம் வளரமாட்டாது. அவை வாசிக்க நல்லவையாகவே இருக்கும். மக்களிற்கு பயன்படமாட்டாது.

 

இந்த நோக்கம் உடைக்கப்பட்டால், அடுத்து நாம் பரந்துபட்ட மக்களின் தலைமையை போராட்டத்தில் நிறுவ, புலிகளை நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கலாம். அதனை அங்கீகரிக்காத பட்சத்தில் அவர்கள் மீது ஆயுத யுத்தம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும்.

 

இன்றுள்ள நிலையில் பிரதான பணியான, சரியான அரசியல் வழி, வேலைமுறையின்றி எவர் வேலை செய்ய முற்பட்டாலும் ரமணியின் பரிதாபகரமான முடிவை நாட வேண்டியிருக்கும்.

 

எனவே உங்கள் சமர் புலிகளை அம்பலப்படுத்துவதையே பிரதானமாக கொண்டிராமல் எமது தேசத்தின் விடுதலை யுத்தத்தில், பரந்துபட்ட மக்களின் நலன்களை கட்டிக்காக்கக் கூடிய பாட்டாளிவர்க்க அரசியல் மார்க்கத்தை கண்டு பிடிக்கும் பணியில், தன்னை முழுமையாக ஈடுபடுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

 

குகன்--லண்டன்

 

இன்று ஈழவிடுதலைப் போராட்டத்தின் திசை வழியைத் தீர்மானிப்பதில், புலிகளை பற்றியொரு பார்வை தவிர்க்க முடியாததாகிறது. இது ஒரு முன்நிபந்தனையாக இல்லையெனினும் இவ்விடயத்திற்கு ஒரு தவிர்க்கமுடியாத முக்கியத்துவம் உண்டு.

 

சமர் 2. 1. தூண்டில் ஆகியவற்றில் வெளிவந்த விவாதங்களை வாசித்திருப்பீர்கள் என நம்புகின்றோம். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த உலக ஒருங்கமைவும், 2ம் உலக யுத்தத்தின் சற்றுப் பின்னர் இருந்த ஒழுங்கமைவும் இப்போதில்லை. நாளாந்தம் உலகமக்களை ஒடுக்குவதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆளும் வர்க்கங்களும், ஏகாதிபத்தியங்களும் புதிய புதிய வழி முறைகளைக் கையாளுகின்றன. வறிய நாடுகளில் எழுகின்ற தேசவிடுதலை யுத்தங்களை அடக்குவதிலும், தமது சந்தைகளை தொடர்ந்து பேணுவதிலும், ஏகாதிபத்தியங்களின் பழைய வழிமுறைகள் சாத்தியமற்றவையாகிவிட்டன. இப்போது முற்றிலும் புதிய வழிமுறைகள் கையாளப்படுகின்றன. இந்த நிலையில் 50ஆண்டுகளுக்கு முன்னைய நிலையைப் போல நாம் சிந்திக்க முடியாது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தின் விளைவாகவே, உங்கள் கடிதத்திலும் முரண்பட்ட கருத்துக்களை காணக்கூடியதாக இருக்கிறது.

 

(1) புலி ஒரு தேசிய விடுதலை இயக்கம், ஆனால் தரகு முதாலாளித்துவ சக்தியா என்பது விவாதத்திற்குரியது என்ற கருத்து.

 

(2) புலி எந்த சக்தியிடமும் உதவி பெறுமென்பதும், அரசுடன் சமரசத்திற்கு போகலாமென்பதும்.

 

முதலில் ஒரு ஏகாதிபத்தியம் புலிகளுக்கு உதவி செய்யவும், புலி உதவி பெறவும் முடியுமானால், ஒன்றில் ஏகாதிபத்தியவாதிகள் முட்டாள்களாகவோ அல்லது புலிகள் தரகு முதலாளித்துவ சக்தியாகவோ தான் இருக்கமுடியும்.

 

தவிர, தரகு முதலாளித்துவமென்பது, அதிகாரத்திலுள்ள ஒரு வர்க்கம். இது போராடுகின்ற சக்தியல்ல ஏகாதிபத்தியங்களின் சார்பில் நின்று மக்களை அடக்குகின்ற சக்தி, இந்த வர்க்கத்திற்கென்று எந்தப் புரட்சிகரமான பாத்திரமுமில்லை. ரஷ்யாவின் நிலப்பிரபுத்துவ ஜார் அரசினைப் போலும், சீனாவின் அரைநிலப்பிரபுத்துவ அரசைப்போலவுமாகும். இதுவே போராட்டத்தில் முதல் எதிரியான வர்க்கம். இதற்கென்று ஒரு தேசியவாதம் கிடையாது. இந்த அடிப்படையிலேயே இந்திய இராணுவத்துடன் (மாகாணசபை அதிகாரம் கேட்டு) புலிகள் நடத்திய பேரமும், சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையை சில அற்ப சலுகைக்காக விட்டுக்கொடுக்க தயாராக இருந்தமையும் பார்க்கலாம். இது தொடர்பாக இரண்டாவது இதழில் குறிப்பிட்டிருந்தோம்.

 

தவிர நீங்கள் குறிப்பிடுவது போன்று மாகாணசபைக்கு எதிராக புலிகள் தன் நலனிலிருந்தே போராட முற்படுகிறது. சொந்த நலனென்பது, எந்த வர்க்கத்தின் பக்கத்திலானது? இது தொடர்பாக இன்னொரு சந்தர்ப்பத்தில் ஆராய்வோம். ஆனால் இருக்கின்ற போராட்டச் சூழலில், ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான வர்க்கங்கள் வெற்றி பெறாமலிருப்பதற்காக, ஏகாதிபத்தியங்களினாலேயே போராட்ட அமைப்புக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் குறிப்பிட்டது போன்று குட்டிமுதலாளித்துவ அமைப்புக்கள் இலகுவில் இவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டது போலவே போராடும் சக்தியில் மக்களை சார்ந்திராத சக்திகளை பல வழியிலும் வளர்த்தெடுத்து புரட்சிகர அமைப்புக்களை அழித்தொழிப்பது. சில சமயம் போராட்டம் வெல்லப்படுமானால் ஆட்சியதிகாரத்திற்க்கு வருபவர்களாக இவர்களை வளர்ப்பது.

 

புலிகள் ஆட்சியதிகாரத்திற்க்கு வர எந்த பிற்போக்கு கும்பலிடமும் உதவி பெறுவார்கள். இது அவர்களின் வர்க்க குணாம்சம். மேலும் தமது அரசியலில். குழம்பிக் கொண்டு இருப்பார்கள். எதனையும் தெளிவாக வைக்க மாட்டார்கள் என்ற கருத்தே புலிகள் தொடபான எமது கருத்தும். இது தொடர்பாக விரிவாக பிறிதொரு கட்டுரையில் விவாதிப்போம். இது தவிர ஏனைய விடயங்கள் தொடர்பாக எமக்கிடையே ஒத்த கருத்துக்களே உள்ளன.

ஆசிரியர் குழு-

 

ராஜீவ் கொல்லப்பட்டது வெறும் பழிவாங்கல் நடவடிக்கையல்ல, அதே நேரம் அந்தக் கொலையை செய்தது புலிகள் தான் என்று நீங்கள் எப்படி கூறுகின்றீர்கள் எனப் புரியவில்லை? என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இக் கொலை தொடர்பாக இந்திய ஆளும்வர்க்கத்தின் முதலாளித்துவ தொடர்பு சாதனங்களினூடாகவே பொதுவான தகவல்கள் வெளிவந்த போதிலும். விடுதலைப் புலிகள் தான் இக் கொலையைச் செய்திருக்கின்றனர் என்பதிற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் பல தற்போது இந்தியாவில் வெளியாகியிருக்கின்றன. இங்கு கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியும், கொலையாளியும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொலை செய்தும், அவர்களின் ஆதிக்கத்திற்கு கீழ் உள்ள மக்களை மரணத்திற்கு தள்ளி தாம் ஏகபோகத்தை அனுபவித்தார்கள். ராஜீவைக் கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என்பதை பிரபாகரன் உரிமை கோரினால் தான் ஏற்றுக்கொள்ளலாம் என்பதில்லை. ராஜீவ் காந்தியை கொலை செய்ய வி-பி-சிங்கின் தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே சிவராசன் ஒத்திகை பார்த்ததையும் ராஜீவ் கொலை செய்யப்பட்ட இடத்தில், பிரச்சார மேடையருகில் விடுதலைப்புலிகளின் சிவராசனும் அவனது சகாக்களும் நின்றதும், குண்டுவெடித்ததும், இந்திய புலனாய்வுத் துறையால் வெளியிடப்பட்ட தகவல்களும், இறுதியாக கொலையாளிகளின் மறைவிடம் பெங்களுரில் முற்றுகைக்கு உள்ளான போது அவர்கள் தற்கொலை செய்து கொண்டதும் உண்மை. ஏன் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் ராஜீவ்காந்தியை கொன்றது நாங்கள் இல்லை என்று அறிவித்ததும் உண்மைதான். ஆனால் கொலையை செய்து முடித்த சிவராசன், சுபா போன்றோர் தமது அமைப்பு இல்லை என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலசிங்கமோ-பிரபாகரனோ குறிப்பிடவில்லை.

 

ராஜீவ் கொலைக்கு அரசியல் காரணம் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளீர்கள். விடுதலைப்புலிகள் என்ற தரகுமுதலாளித்துவ பாசிசக்கும்பலுக்கும் ராஜீவ்காந்திக்கும் இடையிலான முரண்பாடு என்பது பல்வேறு அரசியல், பூகோள, இராணுவ நலன்களுக்கு உட்பட்டதே! இலங்கை- இந்தியா இந்தியா-பாக்கிஸ்தான் ஆகியவற்றிற்கிடையிலான முரண்பாடுகளுடைய அரசியல் அடிப்படையும் விடுதலைப்புலிகள்-இந்திய அரசு ஆகியவற்றின் நலன்களுக்கு இடையிலான அரசியல் அடிப்படையும் ஒரே பிரச்சனைத்தளத்திலிருந்தே பார்க்கப்பட முடியும். இது தவிர புலிகளின் இராணுவ நலன்களும் இதற்கு உட்பட்டதே! இந்தியாவின் பிராந்திய வல்லரசு மனேபாவம், ஏகாதிபத்தியங்களுடனான இந்தியாவிற்கு இருந்த சுயாதீனமுள்ள உறவும், இந்திய புலிகள் முரண்பாட்டுக்கு மேலும் வலுவுள்ள காரணங்களாக அமைந்திருந்தன. இது தவிர ராஜீவ் கொலையினூடாக சாதிக்கக்கூடியதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

இந்திய தேசியத்தை கட்டிகாத்து வரும் நேரு பரம்பரையின் இறுதி நாயகன், தெற்காசிய தேசியத்தின் கவர்ச்சி மிகுந்த தலைவன், இவரை கொலை செய்வதன் மூலம் மேலும் இந்திய தேசியத்தையும், தெற்காசியாவில் இந்தியாவின் உறுதியான ஆதிக்கத்தையும் குலைக்க முடியும்... உங்களது இந்தக்கூற்றை சரியென்று கூறினால் துரோகத்தனம் பிழையென்று கூறினால் வரட்டுத்தனம். இந்தியாவானது, தனது தேவைக்கு அதிகமான சந்தையை கொண்டுள்ள ஒரு நாடு. இந்த ஒரு காரணம் இந்தியாவுற்கு வலுவையும், சுயாதீனத்தையும் கொடுத்துள்ளது. இந்திய தரகு முதாலாளித்துவம் ஏனைய மூன்றாம் உலக நாடுகளிலுள்ள தரகு முதலாளித்துவத்தை விட சற்று வித்தியாசமான இயல்புகளை, இதன் அடிப்படையிலேயே கொண்டுள்ளது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான உள்முரண்பாடுகளை தனது நலன்களுக்கு சாதகமாக இந்திய தரகு முதலாளித்துவம் பாவித்துக்கொள்கிறது. எந்த ஏகாதிபத்தியம் இந்திய தரகு முதலாளித்துவத்தின் நலன்களை கட்டுப்படுத்த முயல்கிறதோ, தரகு முதலாளித்துவம் இன்னொரு ஏகாதிபத்தியத்துடன் குறித்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறவை வளர்த்துக் கொள்கிறது. இது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ஓரு சுயாதீனம் இருப்பதைப் போன்று வெளித்தோன்றல் ஒன்றை கொடுக்கின்றதே ஒழிய உண்மையில் இந்த ஆளும் வர்க்கம் இந்திய தேசியத்திற்கு எதிரானதே! இந்தியாவிற்கு இருக்கின்ற இந்த சுயாதீனத்தின் அடிப்படையில் இருந்து எழுகின்ற பிராந்திய வல்லரசு மனேபாவமும், தெற்காசியாவின் மொத்த நலனுக்கும் எதிரானது. இதுவே எமது கருத்து!

 

80 கோடி மக்களின் வாழ்வுடன் விளையாடியவர்கள் நேரு பரம்பரையினர். தமிழகத்தில் பிரிவினைவாதம் வளர காரணமாக இருந்தவர்கள். தெலுங்கானா மக்களின் சுயநிர்ணய உரிமையை நசுக்கியவர்கள். காஷ்மீர் மக்களை யுத்தநிலைக்கு தள்ளியவர்கள. பஞ்சாப்பில் காங்கிரஸ் என்றாலே காறி உமிழ்கின்ற அளவுக்கு காங்கிரசின் தேசியத்தன்மை வளர்ந்து உள்ளது. அசாமில் தோன்றியுள்ள பதட்டநிலை வடகிழக்கிந்தியாவில் தோன்றியுள்ள பிரிவினைவாதப் போக்கு இவற்றை எல்லாம் நோக்கும் போது, இந்திய தேசியம் என்றால் என்னவென்று கேட்கத் தோன்றுகிறது? தென்கிழக்கு ஆசியாவில் பாக்கிஸ்தானுடன் மூன்று யுத்தத்தை நடாத்தியது. சீனாவுடன் யுத்தம் நடத்தி தோல்வியைக் கண்டது. பங்களாதேசத்தினை சூறையாடியது. ஈழமக்களை கொன்று குதறியது. பூட்டான் மீது ஏற்படுத்தும் நெருக்கடி. நேபாளத்திற்கு எதிரான பொருளாதர தடை இதையெல்லாம் நோக்கும் போது தென்கிழக்காசியாவில் இந்தியா விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட ஒரு பேட்டை ரவுடியாக பரிணமிப்பதை பார்க்கலாம்.

 

எமது கட்டுரையில் தென்கிழக்காசியா விடுதலையை நோக்கி.... என்று குறிப்பிட்டிருப்பது தொடர்பாக ஈழவிடுதலைப் போராட்டம் என்பது உலகப்புரட்சியின் ஒரு பகுதியே. இது உடனடித் தேவையாக தென்கிழக்காசிய விடுதலையுடன் தவிர்க்க முடியாமல் பிணைக்கப்பட்டுள்ளது.

 

எந்த அடிப்படையில் பிரச்சனையைத் தீர்ப்பது என்பது குறித்த உங்கள் கருத்து தொடர்பான சகல பிரச்சனைகளுமே ஆழமான கருத்து விவாதங்களுக்கு உட்படுத்த வேண்டிய உடனடிப்பிரச்சனைகளாகும்.

 

-ஆசிரியர் குழு-

 

 

ஸ்ரீலங்காவின் தமிழ்பேசும் மக்கள் தொகையில் 28 சதவீதத்திற்கும் சற்று அதிகமான தமிழ்பேசும் முஸ்லிம்கள் இன்று ஸ்ரீலங்கா பேரினவாத பாசிச அரசாலும் புலிகள் என்ற சமூகவிரோத பாசிசகும்பலாலும், தமது பாரம்பரிய(பரம்பரை) பிரதேசங்சங்ளை விட்டு துரத்தப்பட்டுள்ளனர். புலிகள், ஜிகாத் இராணுவமென்றும் அனைத்து மேலாதிக்க கும்பல்களும், முஸ்லிம் தேசிய இனத்துக்கெதிரான காடைத்தனங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளன. ஒரு சர்வதேசிய கலாச்சார இணைப்பைக் கொண்டுள்ள, இந்த முஸ்லிம் தேசிய இனத்தின் பிரச்சனை தொடர்பாக சமூக உணர்வுள்ள தேசப்பற்றுள்ள, அனைத்து சக்திகளும் அக்கறை கொள்ள வேண்டிய தேவை இன்று எம் முன்னுள்ளது. இந்த அடிப்படையிலேயே புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் எதிரான முஸ்லிம் மக்களின் தேசவிடுதலைப்போராட்டமானது கட்டியெழுப்பப்பட முடியும்.

 

தமிழ்பேசும் மக்களின் ஒரு பகுதியினரான இந்த முஸ்லிம் தமிழர்களது வரலாற்றின் இன்றைய கட்டத்திற்குரிய நிலை தான் என்ன? முஸ்லிம் மக்கள் தனியான ஒரு தேசிய இனமா? இல்லையா? இக் கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டும். இந்த அடிப்படையிலேயே மொத்த ஸ்ரீலங்காவினதும், ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களது விடுதலை என்பது சாத்தியமாக்கப்பட முடியும்.

 

இங்கே இனம் (RACE) என்பது மக்கள் கூட்டங்களை உருவ அமைப்பினூடாக வேறுபடுத்துகின்ற முறையாகும். மூன்று வேறுபட்ட இனங்களை கூர்ப்புக் கோட்பாடு எங்களுக்கு காட்டுகிறது. ஆனால் உலகில் ஒரு இனத்துக்குள்ளேயே பல தேசிய இனங்கள் இருப்பதை, தேசிய இனக் கோட்பாடு விளக்குகிறது.

 

தேசிய இனம் என்பது ஒரு வரலாற்று வகைப்பட்ட மக்கள் கூட்டமாகும். அதுவும் வரலாற்றின் குறித்த கால கட்டத்துக்குரிய ஒரு மக்கள் கூட்டமாகும். முதலாளித்துவத்திற்கு முன்னைய காலகட்டங்களில் தேசிய இனம் இருந்ததில்லை. இந்தத் தேசிய இனம் என்பது அடிப்படையில் தன்னை மற்றைய தேசிய இனத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்க்குரிய குறியீடாகவே கருதப்படுகிறது. குறித்த விதிகளின் அடிப்படையில் மக்களைக் கூட்டங்களாக இணைக்கும் ஒரு அமைப்பே இது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இவ்வாறு மக்களை கூட்டங்களாக இணைக்கும் அமைப்பாக மன்னனும், பேரரசுக்களுமே இருந்தன. இந்தக் கூட்டத்தின் அமைப்பு விரிந்து சுருங்கக் கூடியதாக இருந்தது. மன்னன் யுத்தங்களின் வெற்றி தோல்விகளின் அடிப்படையில். தனது எல்லையை மாற்றிக்கொண்ட போது மக்களும் அதற்கு ஒத்திசைவாக மாறிக் கொண்டனர். மக்களுடைய ஆதரவுடன் கூடவே ஒருநாட்டு மன்னன் இன்னோரு நாட்டை ஆண்டிருக்கிறான். ஆனால் தேசிய இனம் என்ற தேசிய உணர்வின் அடிப்படையில் மக்களை இணைக்கும் இந்த அமைப்பானது ஒரு குறித்த எல்லைக்குட்பட்டது. இதுவே தேசிய இனத்திற்குரிய பிரதேசம் எனப்படுகிறது.

 

நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் தனியே மொழி அடிப்படையில் அரசுகள் மக்களை இணைத்திருக்கவில்லை. ஆனால் தேசிய இனம் மொழியின் அடிப்படையில் மக்களை இணைக்கின்றது.

 

நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில், குறித்த அரசுகளை அல்லது இராச்சியங்களை நோக்கிய மக்களுடைய பொருளாதார வாழ்வு பிணைக்கப்பட்டிருந்தது. அரசுகள் மாற்றமடையும் போது, அந்தப் பொருளாதார வாழ்வும் மாற்றமடைந்தது. இதனால் ஒரு பொதுவான பொருளாதாரத்தை கொண்டிருக்கவில்லை. ஆனால் முதலாளித்துவம் உருவான பொழுது, இது குறித்த சந்தையை நோக்கியும், அதனைக் கட்டுப்படுத்தும் அரசை நோக்கியும் பொருளாதார வாழ்வு மையப்படுத்தப்பட்டது. எனவே பொதுவான பொருளாதார வாழ்வு ஒன்று மக்களிடையே உருவானது.

 

இதனடிப்படையில் முதலாளித்துவத்தின் உருவாக்கத்தோடு சேர்ந்தே உருவான தேசிய இனம் என்ற மக்களை இணைக்கும் அமைப்பு உருவானது. மேற்குறித்த அடிப்படையில் தேசிய இனம் பின்வரும் விதிகளுக்கு உட்பட்டதாக அமையும் என ஸ்டாலினால் விஞ்ஞான பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது. ஒரு தேசிய இனம் என்பது பொதுவான மொழி, பிரதேசம் (ஆட்சிப்பகுதி) பொதுவான பொருளாதார வாழ்வு, ஒரு கலாச்சாரத்தை தரக்கூடிய மன இயல்பு, ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வரலாற்று ரீதியாக உருவான மக்கள் சமூகமாகும்.

 

இவ்வகையில் குறித்த மக்கள் கூட்டத்தைக் கொண்ட சமுதாயங்கள் முதலாளித்துவத்தின் உருவாக்கத்தோடு உருவாகின. இந்த சமுதாய பகுதியையே தேசம் என்கிறோம். இந்த தேசம் என்பது, இன, நிற, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. பிரஞ்சு தேசம் காவியர்கள் ரோமானியர்கள், பிரிட்டானியர்கள், டியூட்டோனியர்கள் போன்றவர்களிடமிருந்து உருவானது. ஒரு நூறாண்டுக்கு முன்னர் கூட பிரான்சில் பிரஞ்சு மொழி மட்டும் பேசப்படவில்லை பல மொழிகள் பேசப்பட்டன. முதலாளித்துவத்தின் வளர்ச்சியென்பது பல்வேறு தேசிய இனங்களை ஒன்றோடு ஒன்று இறுக்கப் பிணைத்தது. மக்கள் தொகை, உற்பத்திச் சாதனங்கள், சொத்து இவற்றின் சிதறுண்ட நிலைக்கு முதலாளித்துவ வர்க்கம் முடிவு கட்டியது. மக்களைத் திரட்சி பெறச் செய்தது. கிராமத்தவர்களை நகரங்களை நோக்கி துரத்தியது. இதனால் தேசிய இனங்கள் படிப்படியாக அழிந்து போயின.

 

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடானது ஒரே தேசிய இனமாய் உருவெடுத்தது. இன்று பிரஞ்சுதேசம் முழுவதுமே பிரஞ்சு மொழி மட்டுமே பேசப்படுகிறது. முற்றாக வளர்ச்சியடையாத இலங்கை போன்ற நாடுகளில், ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளாக உருவெடுத்தன. முதலில் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து வளர்ந்து வந்த காலத்தில், மக்கள் தேசங்களாக இணைந்து அமையப் பெற்றார்கள். இந்தக் காலகட்டத்தில் ஒரு நாட்டினுள் பல தேசங்கள் உருவாகின. இந்த வளர்ச்சி முற்றாக நிலப்பிரபுத்துவத்தை வெற்றி கொண்ட போது, பல தேசங்களை கொண்ட ஒரு நாடே ஒரு தேசமாக உருவெடுத்தது. இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில், முற்றாக முதலாளித்துவம் வளர்ச்சியடையாத குறித்த நிகழ்சிப்போக்கானது, ஒரு குறித்த எல்லைக்கு மேலாக மக்களை திரளச் செய்யவில்லை. இந்த எல்லையென்பது தான் வேறு வேறு தேசிய இனங்களை உருவாக்கியது.

 

ஒவ்வொரு சமுதாய அமைப்பும் மக்களிடையே சமூகப்பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போகும் போது, புதிய சமுக அமைப்பை உருவாக்க மக்களைத் தூண்டுகின்றன. இவ்வாறே முதலாளித்துவ சமூக அமைப்பானது நிலப்பிரபுத்துவத்தை உடைத்தெறிந்து உருவானது. இந்த முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் ஒரு குறித்த கட்டத்தின் ஒரு தனிவகையான சமூதாயமே தேசிய இனங்களாகும்.

 

பிரான்ஸ் தனியான தேசமாக அமையப் பெற்ற பின்பு இப்போது பிரஞ்சு மொழி என்பதே தேசிய மொழி. மக்களிடையே அன்றாடத் தொடர்பு மொழியும் அதுவே. ஆனால் இலங்கையும், இந்தியாவும் அப்படியானவையல்ல. தமிழ் தேசிய இனம், தமிழ் மொழியைப் பொதுமொழியாக கொண்டுள்ளது. சிங்கள தேசிய இனம் சிங்கள மொழியைப் பொது மொழியாகக் கொண்டுள்ளது. எனவே தேசிய இனம் என்பது ஒரே மொழியைப் பேசும் மக்களிடையே காணப்படுவதாகும். வேறு வேறு மொழியை பேசுகின்ற மக்கள் கூட்டங்கள் ஒரே தேசிய இனமாக இருக்கமுடியாது. எனவே ஒரு நிலையான பொதுமொழி என்பது பிரதான அம்சமாகிறது.

 

ஆனால் ஒரு மக்கள் கூட்டம் தேசிய இனம் என்றவொரு குறித்த காலத்துக்குரிய நிலையான சமுதாயமாக அமைவதற்கு, மொழி என்பது மட்டும் போதுமான அம்சமல்ல. ஒரே மொழியை பேசுகின்ற வேறு வேறு தேசிய இனங்களையும், தேசங்களையும் நாம் பார்க்கலாம். அமெரிக்காவும். இங்கிலாந்தும் ஒருவகை. முஸ்லிம் தேசிய இனமும். மலையக தேசிய இனமும். பூர்வீகத்தமிழ் தேசிய இனமும் தமிழை பொது மொழியாக கொண்ட வேறுவேறு தேசிய இனங்களாகும். அயர்லாந்தும், இங்கிலாந்தும் என்று பல உதாரணங்களை காணலாம்.

 

தேசம் என்பது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில், மன்னனுக்குக் கீழ் இராச்சியங்களாக பிணைக்கப்பட்டிருந்த மக்கள் அதனை உடைத்துக்கொண்டு முதலாளித்துவத்தின் மூலதனச் சங்கிலியால் பிணைக்கப்பட்டபோது தேசிய இனம் என்ற புதிய தொடர்பு முறை உருவானது. இத்தொடர்பு முறைக்கு மொழியென்பது அவசியமானது. ஆனால் இது மட்டும் போதுமானதல்ல! அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் எடுத்துகொண்டால், இது வேறு வேறு அரசின் எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களாகும். எனவே வேறு வேறு அரசின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள், வேறு வேறு தேசிய இனங்களாகவே அமையும். பிரஞ்சு மொழியிருந்து முற்றிலும் வேறுபட்ட பல மொழிகளைப் பேசுகின்ற சுவிஸ், ஜேர்மன், எல்லைகளில் வாழ்ந்த மக்களும் பிரஞ்சு தேசமாக உருவெடுத்தபோது பிரான்சுடன் இணைந்து கொண்டு பிரஞ்சு மொழியை பேசுகிறார்கள். எனவே தேசம் எனப்படும் போது, முதலாளித்துவத்திற்கு பிறகு குறித்த அரசின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசமாக இருப்பது என்பது அவசியமானது. மேலும் இந்த பிரதேசம், மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து அதன் மூலம் ஏற்படும் நீண்ட நெடிய முறையான கலப்பின் மூலம் தேசிய இனங்கள் உருவாகுவதற்கு அவசியமானதாகும். அமெரிக்காவும், இங்கிலாந்தும் வேறு வேறு தேசங்கள். ஆனால் அமெரிக்கர்கள் முன்னர் இங்கிலாந்துக்காரர்களே. (இது பின்னர் அயர்லாந்து, இங்கிலாந்து, ஜேர்மன், இத்தாலி, ஒல்லாந்து, பிரான்சு, ஸ்பானிஸ் போன்ற நாடுகளிலிருந்து சென்ற பெரும் தொகையானோரின் கலப்பிற்குட்பட்டது).ஆனால் அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஒரே தேசமல்ல என்பதற்கு வேறுபட்ட அரசுகள் காரணமாகின்றன. தென்னிந்தியரும், இலங்கையின் பூர்வீகத் தமிழ்மக்களும் தமிழ் பேசும் மக்களே. ஆனால் அவர்கள் வேறு வேறு தேசிய இனங்களே. இவர்களை இணைக்க பொதுவான பகுதியிருந்தும், தென்னிந்தியாவுக்கும், இலங்கைத் தமிழருக்கும் காலனியாதிக்கத்துக்கு முந்திய காலத்தில் பலமான தொடர்புகளிருந்தும், இவ்விரு இனங்களும் வேறு வேறு தேசிய இனங்களாக இனம் காட்டின. எனவே பிரதேசம் எனப்படும் பொழுது

 

(1) முதலாளித்துவ காலகட்டத்திற்கு பிறகு ஒரே அரசின் எல்லைக்குட்பட்ட பிரதேசமாக இருத்தல் வேண்டும்.

 

(2)  மக்கள் செறிவாக அடர்ந்து வாழுகின்ற பிரதேசங்களாக இருத்தல் வேண்டும்.

 

(தொடரும்)

 

 

 

யெல்சின் ஆர்ப்பாட்டமாக ஆட்சிக்கு வந்தார். மேற்கத்தைய அரசுகளும், அரைகுறை மார்க்சிய முலாம் பூசிய பிதற்றல்களும் கம்யூனிசம் தோல்வியடைந்து விட்டதாக வாய் கிழிய முழக்கமிட்டனர். யெல்சின் ஜனநாயகத்தின் காவலன் என பாராட்டுக்கள் ஒருபுறம் நடைபெற, யெல்சின் ஆட்சியில் இருக்கும் வரை சில படங்களையாவது எடுத்து விட வேண்டுமென்ற துடிப்புடன் புகைப்படப் பிடிப்பாளருக்கும் தொலைகாட்சிகளுக்கும் பல்வேறு தோற்றத்தில் தன்னை பிரபல்யப்படுத்த முயல்கிறார்.

 

சமூகத்திலிருக்கும் முரண்பாடுகளைத் தீர்ப்பேன் என வாய்ச்சவாலடித்த யெல்சின் கம்யூனிசத்தின் போலியாக இருந்த குருசோவ்---பிரஸ்நோவ்...கோர்பச்சேவ் ஆகியோரிடமிருந்து, எந்த அரசியல் மாற்றமுமின்றி ஆட்சியமைத்ததுடன் மேலும் தீவிரமாக கம்யூனிசத்தின் அடிப்படைகளை தகர்த்து முதலாளித்துவத்தை செயற்படுத்த முயன்றார்.

 

மக்கள் மீண்டும் உண்மையை உணரத் தலைப்பட்டனர். இன்று கம்யூனிசக் கட்சியின் தலைமையில் நாளாந்தம் போராட்டம் தொடர்கின்றது. மக்கள் தெளிவாகவும், விரைவாகவும் உண்மையை இனங் காணத் தொடங்கியுள்ளார்கள். லெனின், ஸ்டாலின் ஆகியோரின் படங்களை தூக்கியபடி மக்கள் வீதிக்கு வருவது மேற்கத்தைய நாடுகள் மறைக்க முயன்றும் சிலவற்றை மறைக்க முடியாமல் வெளியிட நிர்பந்திக்கபட்டுள்ளார்கள். யெல்சினை பன்றியாகச் சித்தரித்ததுடன் ஒரு மாபீயாவாகவும், விபச்சாரத்தின் தலைவனாகவும் காட்டும் பல கேலிச்சித்திரங்களுடன் தொடரும் ஊர்வலங்கள், யெல்சின் மிக விரைவில் தூக்கி எறியப்படப்போகும் நிகழ்வைக் காட்டுகிறன.

 

ஒரு குறுகிய காலத்தில் மீண்டும் போராட்டம் தொடருமளவுக்கு மக்கள் யெல்சினையும் ஸ்டாலினுக்குப் பிறகு வந்த போலிக் கம்யூனிஸ்டுகளையும் இனம் கண்டுள்ளனர். மக்களின் தெளிவான நிலையையும், சரியான ஒரு கட்சியின் தலைமையையும் இன்று சோவியத் எதிர்கொண்டுள்ளது.

 

நாளாந்தம் நடைபெறும் ஊர்வலங்கள் மேற்கத்தைய நாடுகள் வெளியிடாமல் மறைத்தபோதும், ஒரு சில போராட்டங்கள் சர்வதேச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் மேற்கத்தைய தொலைக்காட்சிகளில் வெளியிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. அவைகளையே ஆதாரமாக வைத்து அவை நடந்த திகதிகளை உங்கள் முன்வைக்கிறோம்.

 

(1) 07-11-1991 இல் அக்டோபர் புரட்சியின் நினைவாக ஆயிரக்கணக்கானோர் யெல்சினுக்கும், முதலாளித்துவத்துக்கும் எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்தினர்.

 

(2) 22-12-1991 இல் மீண்டும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஊர்வலம் நடைபெற்றது.

 

(3) 12-01-1992 இல் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் நடைபெற்றது.

 

(4) 09-02-1992 இல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட ஊர்வலத்துக்கெதிராக யெல்சின் ஊர்வலத்தை நடத்தினார். இரு ஊர்வலங்களும் தமது பலத்தை காட்டும் வகையில் அமைந்தது. மேற்கத்தைய புள்ளிவிபரப்படி 10 ஆயிரம் பேர் யெல்சினை ஆதரித்து ஊர்வலத்தில் பங்குகொண்டதுடன், மதசிலுவைகளும் ஜார் மன்னனின் படங்களுடன் காணப்பட்டனர். இதற்கு எதிராக நடந்த கம்யூனிச ஊர்வலத்தில் 30-ஆயிரம் பேர் பங்குகேற்றதுடன் லெனின் ஸ்டாலின் படங்களுடன் காணப்பட்டனர்.

 

(5) 23-02-1992 இல் பல்லாயிரக் கணக்கானோர்கள் கலந்து கொண்டு ஊர்வலம் நடைபெற்றது.

 

(6) 15-023-1992 இல் ஊர்வலம் நடைபெற்றதுடன் ~பிராவ்தா பத்திரிகை மீண்டும் வெளியிடப்பட்டது. (அன்று1 1-2 கோடி பத்திரிகைகள் வெளிவந்தது.

 

(7) 17-03-1992  20-03-1992  ஆகிய இரு தினங்களிலும் ஊர்வலங்கள் நடைபெற்றன.

 

இவைகள் மேற்கத்தைய தொலைகாட்சிகள் காட்டியது மட்டுமே.

 

தினம் தினம் கிராமம் கிராமமாக நடைபெறும் சம்பவங்கள் பற்றி சரியான தகவல்களை எடுக்க முடியாமையினால், அவைகளை முன்வைக்க முடியவில்லை.

 

இவ்வூர்வலங்களை விட மக்களின் அன்றாட வாழ்க்கையையொட்டி தொலைக்காட்சிகளில் வெளிவந்தவை, அவைகளிற் சில.

 

(1) ஒரு பெண் கிரம்ளனில் உள்ளவர்கள் கிரிமினல்கள் என சொன்ன பொழுது பத்திரிகையாளர்கள் யெல்சினுமா என கேட்கையில் அவர் தான் முதலாவது கிரிமினல் எனச் சொன்னார்.

 

(2) ஒரு கடையில் பொருட்களை வாங்க நின்ற கூட்டத்தில் பொருட்கள் இருந்தும் வாங்க முடியாதளவுக்கு பணமில்லையாம், தங்கள் கையிலுள்ள பணத்தை எண்ணிப்பார்க்கும் பரிதாப நிலையைப் பார்க்க முடிகிறது. அந்தளவுக்கு பொருட்களின் விலை 5-15 மடங்கு உயர்ந்துள்ளது. இது பணக்காரர்களுக்குரிய கடை என அங்கு நின்ற மக்கள் பத்திரிகையாளருக்கு பேட்டியளித்தனர்.

 

(3) ஆயிரக்கணக்கானோர் யெல்சின் ஆட்சியமைந்த பின் வீதிகளில் கொட்டும் பனிகளில் படுப்பதையும், அவர்களின் அவஸ்தைகளையும் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது.

 

(4) கொர்பச்சேவ் ஆட்சிகாலத்தில் சிறைக்கூடத்தில் முடமாக்கப்பட்ட ஒருவன் தன் நெஞ்சின் ஒரு பக்கத்தில் லெனின் மறுபக்கத்தில் ஸ்டாலின் படங்களை பச்சை குத்தி இருந்ததை பார்க்க முடிந்தது.

 

(5) ஒரு பத்திரிகையாளர் ஒரு குடும்பத்தை 4மணி நேரம் கடந்தகாலம், நிகழ்காலம் தொடர்பாக பேட்டியெடுத்தபோது அக் குடும்பத்தவன் கம்யூனிஸ்ட்டாக ஸ்டாலின் காலத்தில் இருந்தவர் அவர் ஸ்டாலின் காலத்தில் கைது செய்யப்பட்டு சிறைகளில் இருந்தவர். அவர் கைது ஸ்டாலினின் தவறுகள் பக்கத்துக்குள் அடக்கலாம். அவர் ஸ்டாலின் பற்றிக் கூறும் பொழுது அவர் சில தவறுகள் விட்டார் எனவும், ஆனால் ஸ்டாலின் சரியாக இருந்தவர் எனவும் கூறிய அவர் குருசோவ்வும் பின் வந்த அனைவரையும் நிராகரித்தார். அதன் பின் இருந்த கம்யூனிசக்கட்சியில் அவர் இருக்கவுமில்லை.

 

(6) அண்மையில் சோவியத் இராணுவத்தின் ஒரு பிரிவு லெனின் சிலைக்கு அஞ்சலி செலுத்திய ஒரு வைபவம் நடைபெற்றது.

 

(7) நாளாந்தம் மக்கள் முண்டியடித்தபடி ஒவ்வொரு கடைகளிலும் பொருட்கள் வாங்க கூட்டமாக கூடும் மக்கள் கடைகள் திறந்தவுடன் அங்கு எதுவுமில்லாத நிலையில் யெல்சினையும் அவர் கூட்டத்தையும் கிரிமினல்கள் என சொல்வதை தொலைக்காட்சிகளே காட்டுகின்றன.

 

இப்படி சில நிகழ்வுகளை தொலைக்காட்சிகள் காட்டியதின் அடிப்படை. இதை நாம் எழுதும் பொழுது இவைகளை விட அங்கு நாளாந்தம் நடக்கும் நிகழ்வுகள் வெளிவராமலும் உள்ளன. மேலும் அங்கிருந்து வரும் தகவல்கள் புரட்சியின் தவிர்க்க முடியாத நிலைமையை கோடிட்டுக் காட்டுகிறது. இனி வரும் சோவியத் புரட்சியானது முதலாளித்துவாதிகள் அரைகுறை மாக்சிஸ்டுகளின் வாய்ச்சவடால்களுக்கு மீண்டும் ஒரு பேரிடியை மிக விரைவில் கொடுக்கும்.

 

 

 

ஈழ விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த நேரத்தில் தமிழ் ஈழ தேசிய விடுதலை முன்னணி ஆரம்பம் முதலே ஒரு இடதுசாரி கருத்தை முன்வைத்து இருந்தபோதும் என்.எல்.எப்.ரி இப் போராட்டத்துக்கு தலைமை தாங்க முடியாமல் போனது ஏன் என ஆராய்வது அவசியம் என்ற அடிப்படையில் இக் கட்டுரையை வெளியிடுகிறோம்.

 

என்.எல்.எப்.ரி இன் கடந்த காலம் பற்றி ஆய்வு வருங்காலப் போராட்டத்தின் ஒவ்வொரு அடிக்கும் மிக மிக அவசியமானது. தேசிய எழுச்சிக்காலத்தில் 30க்கு மேற்பட்ட இயக்கங்கள் தோன்றியிருந்தன். அவைகளுக்குள் தோன்றிய இடதுசாரி இயக்கங்களுக்குள் ஆரம்பத்திலிருந்தே என்.எல்.எப்.ரி உறுதியான இடதுசாரிப் போக்கை கடைப்பிடித்தது. இதைத் தவிர பி.எல்.எப்.ரி, தீப்பொறி, பாசறை என்பன 1985 பிந்தைய ஆண்டுகளில் உருவாகியிருந்தன. இவை தவிர பாதுகாப்பு பேரவை, றெலா(RELO) என்பன குறிப்பிடத்தக்கன, இதில் பி.எல்.எவ்.ரி என்ற அமைப்பு என்.எல்.எப்.ரி யிலிருந்து பிரிந்தது குறிப்பிடத்தக்கது. தீப்பொறி பிளாட்டிலிருந்து தப்பி வந்த பொழுது என்.எல்.எப்.ரி பாதுகாப்பு வழங்கியதுடன் தீப்பொறியின் ஆரம்ப வளர்ச்சிக்கும் என்.எல்.எப்.ரி உதவியது. ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்த என்.எல்.எப்.ரி அரசியல் ரிதீயில் வளர்ச்சி பெற்று, அரசியல் அதிகாரத்தை பெறாமல் போனதுடன், ஒரு சிறு அமைப்பாக கூட மண்ணில் இன்று இல்லாமல் போயுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்வதுடன், அதன் படிப்பினைகளை ஆராய்வது, மீண்டும் என்.எல்.எப்.ரி விட்ட தவறுகளை வருங்காலத்தில் வேறொரு அமைப்பும் விடாமலிருக்க உதவும். அவ்வகையில் இவ் வரலாற்று கட்டுரை அமையும்.

 

தேவை

உலகெங்கும் நாளாந்தம் நடக்கும் சம்பவங்கள் மனிதகுலத்தின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 2ம் உலகயுத்தத்தின் பின்னர் ஏகாதிபத்தியங்களால் தமது சுரண்டல் நோக்கங்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட உலகம் இப்போது மறுபடி ஒழுங்கமைக்கப்படுகிறது. சோவியத் ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் வலு, இணைக்கப்பட்ட ஜரோப்பாவின் ஆதிக்கம், அமெரிக்காவின் இழுபறி என்று அதிகார வர்க்கங்கள், மனித குலத்தைப் பந்தாடிக் கொண்டிருக்கின்றன. உலகின் வறிய நாடுகளைப் பங்கு போட்டு கொள்வதற்கு ஏகாதிபத்தியங்களிடையேயான போட்டி உக்கிரமடைந்துள்ளது. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் மனிதகுலம் போராடிக்கொண்டிருக்கிறது. போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும, பயங்கரவாதத்தையும் விளைவாக்கிக் கொண்டு. திசை அறியாமல் தேசங்கள் தவித்துக் கொண்டு இருக்கின்றன. எங்கும் நம்பிக்கை தெரிவதற்கான ஒரு கணப்பொழுதையேனும் காணமுடியவில்லை. இந்த நிலையில் நமது எதிர்காலம்? நாங்கள் என்ன செய்யப்போகிறோம்? சமூகத்தில் அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதனும் விடை கண்டாக வேண்டிய கேள்வி இது!

 

இந்த நிகழ்வுகளுக்காக மனம் நொந்து கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக் குவித்துக் கொண்டிருப்பது தானா எமது பணி? ஜரோப்பாவில் இருக்கின்ற சமூக உணர்வுள்ள முற்போக்குச் சக்திகள் தமக்கு முன்னால் உள்ள வரலாற்று பணி கவிதை வடிப்பதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். 1917 ரஷ்யப் புரட்சி முடிந்த பிறகு, சீனாவை வழிநடத்திச் செல்வதற்காக மாவோ சேதுங் ரசிய புரட்சியின் சித்தாந்தத்திலிருந்து மாறுபட்ட அந்த காலகட்டத்துக்குரிய புதிய சிந்தனைகளை முன்வைத்தவர். வர்க்கங்களின் அணி சேர்க்கையில் வேறுபாடுகளை முன்வைத்தார். அதுவே புதிய ஜனநாயகப் புரட்சி என்றார். அன்றைய சமூக நிலைமை அரசியல் நிலை என்பன தொடர்பான தெளிவான ஆய்விலிருந்து, முரண்பாடில்லாத வகையில் முன்வைக்கப்பட்ட தத்துவத்தின் அடிப்படையில் சீனப் புரட்சி வெற்றி வரை வழிநடத்தப்பட்டது. ஆனால் ஈழத்தில் போராட்டம் பற்றிய சிந்தனைகள் விடுதலை பற்றிய உணர்வுகள் இருந்தும் ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் பலிகொள்ளப்பட்ட பிறகும் கூட ஈழத்தின் அரசியல் நிலைமை தொடர்பாகவோ போராட்டத்தின் தோல்விகள் தொடர்பாகவோ பொதுவாக யாரும் சிந்தித்ததாக தெரியவில்லை. கவிதை கதை மிஞ்சிப்போனால் இயக்கங்கள் பற்றியும் அரசு பற்றியும், கடுமையான கண்டனமும் கவலையும்......! சிலவேளையில் வெடிகுண்டு புரளி போல அவ்வப்போது சில கருத்துக்கள் ஜக்கிய இலங்கைப் புரட்சி, கவிதை என்றால் என்ன? கலை மக்களுக்காகவா, ராஜீவ் காந்தி கொலை மனிதாபிமானமற்றது ...இப்படி வினோதங்கள்.

 

இதை விட ஈழப்போராட்டம் பற்றிச் சிந்திக்கின்ற பெரும்பான்மையானவர்கள் மத்தியதர வர்க்கத்திலிருந்து வந்த இளைஞர்களே, இவர்கள் ஒரு கருத்தைப்பற்றி சிந்திப்பதில்லை. முதலில் அந்தக் கருத்துக்குப் பின்னாலுள்ள குழு அல்லது இயக்கம் பற்றிய மேலோட்டமான முடிவுக்கு வருவார்கள். இதையே பொது முடிவாக்கிக்கொண்டு ..... பிறகு கருத்தும் கத்திரிக்காயும்? எமது போராட்டம் சீரழிக்கப்பட்டு விட்டது. மக்கள் துப்பாக்கிகளுக்கும் வெடிகுண்டுகளுக்கும் நடுவே சாவுடன் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தெற்காசியா முழுவதிலும் புரட்சியின் வீச்சை வலுவாக்கவல்ல எமது போராட்டம் ஏன் சீரழிந்து போனது?, கவிதையும், சிறு கவிதையும் பற்றாக்குறையாகிப் போனதாலா? இது மட்டும் தானா எமது தேவை? மக்களின் கரங்களில் ஆயுதம் தேவை. சித்தாந்த ஆயுதம்! நிராயுதபாணிகளான இந்த மக்களை இன்றைக்கு பாசிஷம் ஆட்சி செலுத்துகிறது. முதலாவது சமரிலேயே இது பற்றி வரிக்குவரி எழுதியிருந்தோம். ஆனால் தூண்டிலில் பிரஜைகள் தவிர பொதுவாக எவருமே இதுபற்றி பொறுப்புடன் கருத்திற் கொண்டதாக தெரியவில்லை.

 

தூண்டில், மனிதம், பனிமலர், சக்தி என்று சமூகம் பற்றி தீவிரமாகப் பேசிக் கொள்கின்ற ஜரோப்பிய சஞ்சிகைகள் சில தத்துவார்த்த பிரச்சனை தொடர்பாகவும் பொறுப்புடன் கருத்தில் கொண்டால், எமது போராட்டத்தில் விடப்பட்டிருக்கிற பெரிய இடைவெளியை கணிசமானளவு நிரப்ப முடியும். நமது தேசத்தில் மறுக்கப்பட்டிருக்கின்ற கருத்துச் சுதந்திரம் இங்கே ஓரளவு கிடைக்கிறது. என்பதைப் பயன்படுத்திக் கொண்டு இதனை பயனுள்ள காலமாக்கிக் கொள்ள முடியும்.

 

சமர் ஆசிரியர் குழு

 

 

 

வாசகர்களும் நாங்களும்

நட்புடன் சுகனுக்கு.

சமர் ஆசிரிய குழுவிற்கு நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. எழுத்து மூலமான பதிலினைத் தர தாமதித்து விட்டோம் மன்னிக்கவும். எமக்கு உங்கள் நிலைப்பாடு சம்பந்தமாக விளக்கமில்லாமல் உள்ளது. சமர் ஆசிரியர் குழு சார்பாக நாம் உங்களுடன் திரு நித்தியானந்தன் அவர்கள் பற்றிய விமர்சனங்களை முன் வைத்தோமா? அவ்வாறு இல்லாத பட்சத்தில், சமர் எவ்வாறு மக்களின் அடிப்படைச் சுதந்திரமான கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரங்களுக்காக போராடும் முதலாவது கோஷத்திற்;கு இன்றைய நிலையில் முரணாக செயப்படுவதாக குறிப்பிடுவீர்;கள். உங்களது கடிதம் தொடர்பாகவே சமா, திரு நித்தியானந்தன் சம்மந்தமாகக் கொண்டுள்ள விமர்சனத்தை முன்வைக்கின்றது. திரு நித்தியானந்தன் அவர்களது அரசியல் செயல்பாடுகள் எதற்குமே சமர் இடையூறானது அல்ல. ஆனால் சமர் மூன்றில் (3) குறிப்பிட்டிருந்த மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரங்களுக்காகப் போராடும் நிலைப்பாட்டில் திரு நித்தியானந்தன் அவர்களுடன் இணைந்து செயல்படுதல் எனும் விடயத்தில் சமர் ஒரு திடமான நிலைப்பாட்டிலுள்ளது. திரு நித்தியானந்தன் அவர்கள் ஆரம்ப காலங்களில் இருந்தே விடுதலைப் புலிகளின் உறுப்பினர், மட்டக்களப்பு சிறைமீட்புக்கு பிற்பாடு விடுதலைப் புலிகளின் பத்திரிகை ஆசிரியராகவும் இருந்துள்ளார். மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டு மக்கள் நடைப்பிணங்களாக்கப்பட்டு வந்த நிகழ்வானது விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலம் தொட்டே அடித்தளமிடப்பட்டு வந்ததொன்றாகும். விடுதலை புலிகள் ஆனது ஆரம்பம் தொட்டே எம் தேசத்தின் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து வந்தது. சிலவேளை இன்று ஆயுதம் ஏந்திப் போராடும் எம் சிறார்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் திரு நித்தியானந்தன் அவர்களுக்கும் இதுபற்றி தெரியாதிருந்திருக்கலாம் என நண்பர் சுகன் நினைக்கிறரா என எண்ண வேண்டியுள்ளது. திரு நித்தியானந்தன் அவர்களினால் இங்கு(பிரான்ஸ்சில்) கருத்தரங்கு ஒன்றில் சிலர் திரு நித்தியானந்தன் அவர்களிடம் நீ யார் எனக்கேட்டது நம் எல்லோர் காதுகளிலும் விழுந்தது. இது நண்பர் சுகனின் காதுகளிலும் விழுந்திருக்கும் என நம்புவோம.; திரு நித்தியானந்தன் அவர்களது கடந்த கால அரசியல் வாழ்வில் விமர்சனங்கள் சந்தேகங்கள் இல்லை என அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக கருதும் தார்மீக துணிவு சிலவேளைகளில் நண்பர் சுகனுக்கு இருக்கலாம். ஆனால் எமக்கு அத்தகைய நிலைப்பாடுகள் மீது நம்பிக்கை இல்லை. இவ்வாறான நிலைகளில் திரு நித்தியானந்தன் அவர்களது கடந்த காலம் மீது விமர்சனங்கள் சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாதுள்ளது. அவரின் கடந்தகால அரசியல் வாழ்வுக் காலங்களில் அவரினால் ஜனநாயக மறுப்புக்கு எதிராக உள்ளுக்குள்ளேயே போராடியிருக்கலாம். அல்லது மௌனித்து(மௌனிக்க)வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது ஆதரித்திருக்கலாம் என்னும் கேள்விகள் எழுவது கூட தவிர்க்க முடியாததல்லவா? எனவே தான் சமர் இணைந்து செயற்படுதல் என்னும் விடயத்தில் விமர்சனம், சுயவிமர்சனம் என்பவற்றிக்கூடாக முரண்பாடுகளை சந்தேகங்களை விளக்கங்களை தெளிவுபடுத்திக் கொண்டு செயற்பட நினைக்கிறது. இவ்விமர்சன நிலைப்பாடானது எந்த ஒரு தனிமனிதனுக்கோ அல்லது சமூகத்துக்கோ அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுப்பதாக அமையாது. அவ்வாறு இல்லை என நண்பர் சுகன்; நினைப்பாராக இருந்தால் சுகனிடம் இருந்து விரிவான பதிலினை சமர் எதிபார்க்கின்றது.

ஆசிரியர் குழு.

 

 

வாசகர்களும் நாங்களும்

 

ஒரு தேசவிடுதலைப் போராட்ட காலகட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார் என்ற ஒரு மிகப்பெரும் தத்துவார்த்தப் பிரச்னை தொடர்பாக "முரண்பாடு பற்றி" என்ற நூலில் மாவோ தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். மக்கள் மத்தியிலுள்ள தவறிழைப்பவர்களையும் மக்கள் அல்லாத ஒரு வர்க்கத்தினுடைய பிரதிநிதிகளையும் ஒரே பார்வையிலிந்து நாம் பார்க்க முடியாது. இந்த நிலையில் "மக்கள் யார்" "துரோகிகள் யார்" எனத் தீர்;மானிப்பது என்பது ஒரு பக்கப் பிரச்சனை. ஆனால் எந்த வகையிலும் ஒரு தேசவிடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் அதிகார வர்க்கத்தின் பக்கத்திலும். ஏகாதிபத்தியத்தின் பக்கத்திலும் சார்ந்து நிற்கின்ற எந்த சக்திகளையும் "மக்கள்" என்ற வரையறைக்குள் அடக்கி விடமுடியாது. இந்த வகையில் தான் நாம் குறிப்பிட்ட பத்ம நாபா, சிறிசபாரத்தினம், உமாமகேஸ்வரன் போன்ற நபர்களை பார்க்கிறோம.; "மக்கள்" என்ற வரையறைக்குள் அடக்க முடியாத இந்த நபர்களை எவ்வாறு சமூகத்திலிருந்தும், மக்கள் மத்தியிலிருந்தும் அகற்றுவது என்பது குறித்த ஒரு பிரச்சனை ஆகும். அது பற்றி நாங்கள் இங்கு விவாதிக்கவில்லை. ஆனால் இவ்வாறான நபர்கள் தமக்கிடையில் உள்ள உள் முரண்பாடுகள் காரணமாக அழிக்கப்படும் போது அவர்களுடைய இறப்பு அநாவசியமானது என்றோ அல்லது அதற்காக ஒப்பாரி வைப்பதோ தேவையற்றது ஆகும். மேலும் ஒரு உயிரின் கொலைக்காக கண்ணீர் வடிக்கும் ஆன்மீகவாதத்தின் அதீத மனிதாபிமான தன்மை வாய்ந்ததாகும். இப்போது தூண்டிலில்(பத்திரிகை) நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ராஜீவ் கொலை தொடர்பான ஆக்ரோசமான ஆனால் அநாவசியமான விவாதங்கள் தொடர்பாகவும் எமது கருத்து இதுவே!

ஆசிரியர் குழு

 

 

முன்னெப்போதும் இல்லாதவாறு உலகம் முழுவதும் போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும். அழிவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. நாகரீகம் வளர்ந்து விட்டதாகப் பறைசாற்றப்படுகின்ற இந்த நூற்றாண்டில் மனிதம் செத்துப் போய் பிண வாடை வீசுகின்றது. நிறவெறியர்கள், இனவெறியர்கள், மதவெறியர்கள் என்று வேட்டைக் கும்பல்கள் தமது கோரப்பற்களை மனித குலத்தின் மீது பதிக்க ஆரம்பித்து விட்டன. ஒவ்வொருவரின் மனதிலும் பயம், ஏக்கம், ஆதங்கம்! நாளைய எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி! மனித குலம் தனது விடுதலைக்கான ஒரு வழியைத் தேடிக் கொள்ள வேண்டிய அவசரத் தேவையை இவை உணர்த்தி நிற்கின்றன. இந்த வழி என்ன? மனிதகுல விடுதலைக்கான தத்துவம் என்ன? சமதர்மம் நிலவியதாகக் கூறப்பட்ட சோவியத் யூனியன் சிதறிச் சின்னாபின்னமாகிப் போய்விட்டது. வியட்நாம், சீனா, கியூபா, நிக்கரகுவா இப்படி எதுவுமே நம்பிக்கையற்றுப் போய்விட்டன. இந்த தோல்விகளுக்கான காரணம் என்ன? நாளை நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? நிச்சயம் இவை தொடர்பான ஆய்வுகள் தேவை. அதுவும் செய்திகளைக் கூடியளவு சேகரித்துக். கொள்ளக் கூடிய ஜரோப்பியச் சூழல் ஒன்றில் வாழ்கின்ற ஒவ்வொரு சமூகப் பற்றுள்ள மனிதனதும் கடமையாகும். இது தொடர்பான ஆய்விற்கு ஒரு வழியைத் திறந்து விடும் நோக்கிலேயே இந்தக் கட்டுரை அமைகின்றது. மாறாக இது ஒரு ஆய்வு அல்ல.

 

மனிதர்கள் வரலாற்றைப் படைப்பதில்லை வரலாறே மனிதர்களைப் படைக்கின்றது. ஆனால் வரலாற்றின் குறித்த கட்டங்களில் ஒரு தனி மனிதனுக்கு ஒரு எல்லை வரையான பாத்திரம் இருந்ததுண்டு. இந்த வகையில் ரஷ்சிய புரட்சி வரலாற்றில் லெனின், ஸ்டாலின், ட்ரொஸ்கி ஆகிய நபர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் சோவியத் ய+னியனின் புரட்சிக்குப் பிந்திய ஆய்வை எங்கிருந்து தெ;hடங்குவது? என்று கேட்டால், ஸ்டாலினிருந்தே தொடங்குவது உகந்தது. ஸ்டாலினைப ;பற்றியதும், ஸ்டாலின் காலகட்டம் பற்றியதுமான விமர்சனம் என்பது இந்த ஆய்விற்கான வழியைத் திறந்து வைக்கும் என நம்புகிறோம்.

 

ஸ்டாலின் தொடர்பாக இரண்டு வகையான போக்குகள் பொதுவாக நிலவுகின்றன.

(1) கண்மூடித் தனமான ஸ்டாலின் வழிபாடு.

(2) ஸ்டாலினை முற்றாக நிராகரித்தல்.

இந்த இரண்டு வகையான போக்கும் அடிப்படையாக தவறானவையாகும். முதலாவதாக ஸ்டாலினின் மீது எந்த தவறும் இல்லை. அப்படி தவறு செய்திருந்தாலும் அது தவிர்க்க முடியாததும், பாதிப்பற்றதுமான தவறு என்று சொல்லப்படுவது தாராளவாத வகைப்பட்டதாகும். ஸ்டாலின் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பதவியை ஏற்ற காலத்திலிருந்தே ஸ்டாலின் மீதான தவறுகள் கம்யூஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாலும் குறிப்பாக லெனினாலும் விமர்சிக்கப்படவையாகும். 1898 இல் இருந்து கட்சி உறுப்பினரான ஸ்டாலின் 1912 போல்ஷ்விக் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரானார். தேசிய இன விவகாரங்களிலும், இராணுவ விவகாரங்களிலும் முக்கிய பங்கு வகித்தவர். தேசிய இனப்பிரச்சனை தொடர்பான தத்துவார்த்தக் கட்டுரை எழுதியதன் மூலம் கட்சியினாலும் லெனினாலும் வெகுவான பாராட்டைப் பெற்றார். தேசிய இன விவகாரக் கமிஸாராக 1917 இல் இருந்து 1923 வரை இருந்தவர். 1922 இல் கட்சியின் மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளராக இருந்தவர். ஸ்டாலின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றதிலிருந்து 1924 இல் லெனின் இறந்து போகும் வரை, லெனினால் நடைமுறைப் பிரச்சனைகளிற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 1953 இல் ஸ்டாலின் இறந்து போன பிறகு ரஷ்யக் கம்யூஸ்ட் கட்சியானது முழுமையாகத் திரிபுவாதத்தில் மூழ்கிப்போனது. ஸ்டாலினுக்குப் பிறகு தலைமையை ஏற்றுக் கொண்ட குருஷேவ்வும் அவருடைய கும்பலும் புரட்சிக் காலத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களல்ல. புரட்சிக் காலத்தில் கட்சியின் முக்கிய பங்கு வகித்த புகாரின், பியத்கோவ் போன்ற இன்னும் பல தலைவர்கள் ஸ்டாலின் மறைவுக்கு முன்னரே கட்சி விரோதச் செயல்களிற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர். இவையெல்லாம் சடுதியாக நிகழ்ந்த திடீர் நிகழ்ச்சிகளல்ல. ஸ்டாலினின் பங்கும் இதில் கருத்தில் கொள்ளப்பட்ட வேண்டியதே!

 

ஸ்டாலினிடம் இருந்த தத்துவார்த்தத் தவறு என்ற பக்கத்தில் தேசியவாதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது என்பதே பொதுவாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சில தடவைகள் விமர்சித்துள்ளது. ஆனால் அன்றைய சர்வதேசிய நிலைமைகளும், தேசிய நிலைமைகளும் இவ்வகையான தேசியவாதத்தின் தேவையை அதிகப்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. மேலும் தேசிய இனப்பிரச்சனை தொடர்பாகவும், தேசிய சிறுபான்மை இனங்களின் பிரச்சனை தொடர்பாகவும் ஸ்டாலினின் தத்துவார்த்த தவறுகள் குறித்துக் சுட்டிக் காட்டப்படுகின்றன. இந்தப் பிரச்சினைகளில் ஸ்டாலினினது நிலை லெனினாலும் கம்யூனிஸ்ட் கட்சியாலும் முன்னமே அங்கீகரிக்கப்பட்டது என்பதும், 1917 இல் இருந்து ஸ்டாலின் தேசிய இன விவகாரங்களுக்கான கமிசாராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தேசிய இனப்பிரச்சனையில் ஸ்டாலினின் தத்துவம் தர்க்கரீதியானதும், வரலாற்றுரீதியான அணுகுமுறையுடன் கூடியதுமாகும். இதனை விமர்சிக்க முற்படுகிறவர்கள் எவருமே தேசிய இனங்களுக்கான புதிய தத்துவார்த்த கருத்துக்கள் எதையும் இது வரையில் முன்வைத்ததில்லை.

 

மனிதம் "சுவிஸ்லாந்திலிருந்து வெளிவரும் பத்திரிகை. தனது கட்டுரை ஒன்றில் உடைந்து நொருங்கியிருக்கும் சோவியத் குடியரசுக்கிடையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கோர்பச்செவ் ஈடுபட்டுள்ளார். இந்த புதிய ஒப்பந்தம், குடியரசுகளுக்கிடையில் முழுமையான சுதந்திரத்தை அங்கீகரிக்கின்றது. அதேசமயம், பொருளாதார மேம்பாடு, உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் நடவடிக்கைகள், நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான ஒரு ஜக்கியத்தை வலியுறுத்துகின்றது. இந்த அடிப்படையில் பத்துக் குடியரசுக்களை இணைக்கும் முயற்சியில் கோர்பச்செவ் இறங்கியுள்ளார். இந்த முயற்சி வெற்றி பெறுமாயின், தேசிய இனப் பிரச்சனைக்கு சிறப்பான தீhர்வொன்றை எட்டிய முதல் நாடாக சோவியத் யூனியன் திகழும். ஆனால் இன்று வலுத்து வரும் நெருக்கடிகள் கோர்பச்சேவின் புதிய யூனியனை கட்டிக்காக்குமா என்பது சிந்தனைக்குரியது." என குறிப்பிட்டுள்ளது.

 

தேசிய இனப் பிரச்சனையில் ஒரு தேசிய இனம் தான் சுதந்திரமாகப் பிரிந்து போவதும் சேர்ந்து வாழ்வதும் என்பது அந்த நாட்டின் குறித்த சூழ்நிலைகளிலே தங்கியுள்ளது. எனினும், பொதுவாக ஒடுக்கப்படுகின்ற தேசிய இனம், தனது தேசியத்தை ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்வதை முன்னிறுத்தும் போதே அது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகவும். தேவையானதாகவும் அமையும். ஆனால் தனது மூலதனச் சுரண்டலை நோக்கமாகக் கொண்டு ஒரு ஏகாதிபத்தியம் தேசிய இனப் பிரச்சனையைப் பயன்படுத்துமாயின் அது அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும். ஆனால் சோவியத் யூனியனில் இந்தப் பிரச்சனை ஏகாதிபத்திய நலன்களின் அடிப்படையிலேயே தொடர்ந்தும் கையாளப்படுகிறது. எனவே இவ் வகைப்பட்ட தீர்வானது தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வில் புதிய குழப்பங்களை ஏற்படுத்தும். ஆனால் நடைமுறைப் பிரச்சனைகளில் ஸ்டாலின் கடைப்பிடித்த போக்கானது , ஸ்டாலின் மறைவுக்குப் பின் கட்சியைத் திரிபுவாத நிலைக்குக் கொண்டு செல்வதிலும், ஒரு அதிகாரக் கூட்டம் வளர்வதிலும் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது.

 

ஸ்டாலினது நடைமுறைத் தவறுகள் தொடர்பாக லெனின் விமர்சனங்களை முன்வைக்கும் போது, ஸ்டாலினை விட அதிக சகிப்புத்தன்மையும், அதிக விசுவாசமும், தோழர்கள் பால் அதிக பரிவுணர்வும், குறைவான தான்தோன்றிப் போக்கும் உடையவரான ஒரு பொதுச் செயலாளரை கம்யூனிஸ்ட் கட்சி பெற வேண்டும் என்றார்.

 

1922 மார்கழி 24ம் திகதி கடிதத்துடன் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

 

ஸ்டாலின் பெரிதும் முரட்டுச் சுபாவமுடையவராய் இருக்கிறார். இந்தக் குறைபாடு நம் மத்தியிலும் கம்யூனிஸ்டுகளாகிய நம்மிடையிலான விவகாரங்களிலும் சகித்துக் கொள்ளக் கூடியதே என்றாலும் பொதுச் செயலாளராய் இருக்கும் ஒருவரிடம் சகிக்க முடியாததாகி விடுகிறது. எனவே தான் ஸ்டாலினை அந்தப் பதவியிலிருந்து அகற்றிவிட்டு அவருக்குப் பதில் வேறொருவரை நியமிப்பதற்கான வழி குறித்துத் தோழர்கள் சிந்திக்க வேண்டுமென்று நான் யோசனை கூறுகிறேன். இந்த வேறொருவர் ஏனைய எல்லாவிதத்திலும் தோழர் ஸ்டாலினிடமிருந்து, ஒரேயொரு அனுகூலமுடையவராய் இருப்பதில் மட்டுமே- அதாவது, அதிகச் சகிப்புத் தன்மையும், அதிக விசுவாசமும், தோழர்கள் பால் அதிக நன்னயப் பாங்கும் அதிக பரிவுணர்வும், குறைவான தான்தோன்றிப் போக்கும், இன்ன பிறவும் உடையவராய் இருப்பதில் மட்டுமே வேறுபடுகிறவராக இருத்தல் வேண்டும். இந்த விவரம் கவனியாது ஒதுக்கப்பட வேண்டிய சிறு விவரமாகத் தோன்றலாம். ஆனால் பிளவுக்கு எதிரான காப்பு நடவடிக்கைகளின் கண்ணோட்டத்திலும், ஸ்டாலினுக்கும் திரோஸ்கிக்கும் இடையிலான உறவுநிலை குறித்து மேலே நான் எழுதியதன் கண்ணோட்டத்திலும் இது சிறு விவரமல்ல, தீர்மானகரமான முக்கியத்துவம் பெறக் கூடிய சிறு விவரமாகும். (லெனின்)

இந்த நோக்கு நிலையிலிருந்து நிலைப்பாடுப் பிரச்சனையில் ஸ்டாலினையும் திரோத்ஸ்கியையும் போன்ற மத்தியக் கமிட்டி உறுப்பினர்களே பிரதான காரணக் கூறுகளாய் இருப்பதாய் நான் நினைக்கிறேன். பிளவு ஏற்படும்படியான அபாயத்தில் பெரும் பகுதி இவர்கள் இடையிலான உறவுகளிருந்தே எழுகிறதென்று நினைக்கிறேன். இந்த பிளவு தவிர்க்கபடக் கூடியதே. ஏனைய பலவற்றுடன் கூட மத்திய கமிட்டி உறுப்பினர்களது எண்ணிக்கையை 50 அல்லது 100 ஆக அதிகமாக்குவதானது என் அபிப்பிராயத்தில். இந்த நோக்கம் ஈடேற உதவியாய் இருக்கும். தோழர் ஸ்டாலின் பொதுச்செயலாளராகி விட்டதால் அவர் கையில் வரம்பு கடந்த அதிகாரம் குவிந்திருக்கிறது. இந்த அதிகாரத்தை எப்போதும் அவர் போதுமான எச்சரிக்கை உணர்வுடன் பயன்படுத்தக் கூடியவரா என்பது குறித்து நான் உறுதியாக சொல்வதற்கில்லை. மறுபுறத்தில், தோழர் திரோத்ஸ்கி தனிப்பட வேறுபடுத்திக் காட்டப்படுவது போக்குவரவு மக்கள் கமிசராகம் பற்றிய பிரச்சனையில், மத்திய கமிட்டியை எதிர்த்து அவர் நடத்திய போராட்டம் நிருபித்திருப்பது போல்-- உன்னதச் செயலாற்றலால் மட்டுமல்ல. தற்போதைய மத்திய கமிட்டியில் தனிபட்ட முறையில் அவரே யாவரிலும் வல்லமை வாய்ந்தவர் எனலாம். ஆனால் அவர் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார், பணியில் முழுக்க முழுக்க நிர்வாகத் தன்மையதான தரப்பில் அளவு மீறி மூழ்கிவிடுகிறவராகவும் தம்மைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

தற்போதைய மத்தியக் கமிட்டியின் இரண்டு சிறந்த தலைவர்களது இவ்விரு இயல்புகளும் மனமறியாத முறையில் பிளவுக்கு இட்டு சென்று விட முடியும். நம் கட்சி இதைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாவிடில், இந்தப் பிளவு எதிர்பாராத விதத்தில் வந்து நேரலாம். ஸ்டாலினது அவசரமும் மற்றும் தூய நிர்வாகத்துடனான அவரது மோகமும் பகிரங்கமான "சோஷலிஸ்டு--தேசியவாதத்தினை|| எதிர்த்த அவரது வன்மமும் சேர்ந்து இங்கு பேராபத்தான ஒரு பாத்திரத்தை வகித்துள்ளன என்று நான் கருதுகிறேன். அரசியலில் வன்மம் பொதுவாக மிகவும் இழிந்ததான பாத்திரமே வகிக்கிறது. மத்திய கமிட்டியின் இளம் உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், புஹாரினையும் பியத்தகோவையும் பற்றிச் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். என் கருத்துப்படி அவர்கள்(யாவரிலும் இளையவர்களில்) தலைசிறந்தவர்கள். அவர்கள் குறித்து, பின்வருவதை மனதில் கொண்டாக வேண்டும். புஹாரின் கட்சியின் மதிப்பு மிக்க ஒரு பிரதான தத்துவார்த்தி மட்டுமன்றி, கட்சி அனைத்தின் அபிமானத்துக்கு உரியவராய் நியாயமாகவே கருதப்பபடுகிறவரும் ஆவாh. ஆனால் அவரது தத்துவார்த்தக் கருத்தோட்டங்களைப் பெரிய நிபந்தனை வரையறைகளுக்கு உட்பட்டே முழு அளவுக்கு மார்க்ஸிய கருத்தோட்டங்களாக வகைப்படுத்த முடியும், ஏனெனில் பண்டித புலமைவாதம் வாய்ந்த ஏதோ ஒன்று அவரிடம் காணப்படுகிறது (இயக்கவியலை அவர் எந்நாளும் அதைப் பூரணமாக உணர்ந்தவரல்ல என்று நினைக்கிறேன்). வி.இ. லெனின்

ஸ்டாலினது இவ்வாறான தான் தோன்றிப் போக்குகள், கம்யூனிஸ்ட் கட்சியின் பல முக்கியமான, உணர்வு பூர்வமான போராளிகளைப் பலி கொண்டதோடு மட்டுமன்றி, ஸ்டாலின் மறைவுக்குபின் குருஷேவ் தலைமையிலான திரிபுவாதக் கும்பல் வளர்ந்து இக்கும்பல் கைகளில் ஆட்சியதிகாரம் சென்றடைந்தது. இது சடுதியாக நிகழ்ந்த திடீர் நிகழ்ச்சியல்ல. ஸ்டாலினது நீண்டகாலத் தலைமைத்துவத்தின் ஒரு விளைவே!

 

ஆனால் இந்த சந்தர்ப்பங்களில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய உள்நாட்டு எதிர்ப்புரட்சி யுத்தங்களும், ஏகாதிபத்திய நாடுகளின் தாக்குதல்களும், சோவியத் சந்தித்திருந்த மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியும் ஸ்டாலினது இந்தப் போக்கை மேலும் ஊக்கப்படுத்தியது எனலாம். இது தவிர, இதற்கான பொறுப்பு ஸ்டாலின் என்ற தனி நபரை மட்டுமல்ல மொத்தக் கம்யூஸ்ட் கட்சியையுமே சார்ந்ததாகும். மறுபுறத்தில் உலகப்பாட்டாளி வர்க்கத்திற்கு ஸ்டாலின் ஆற்றிய சேவையும், ஸ்டாலினது தத்துவங்களும், இரண்டாம் உலகப்போருக்கு முற்பட்ட காலப்பகுதியில், ஏகாதிபத்தியங்களை விட 100 ஆண்டுகள் பின் தங்கியிருந்த சோவியத் தொழில் துறை, கிட்டத்தட்டக் குறுகிய காலத்தில், ஏகாதிபத்தியங்களுடன் போட்டி போடுகின்ற அளவுக்கு வளர்ந்தது. முப்பதிற்;குப் பிந்திய கால கட்டங்களில் சோவியத்தின் தொழில்துறை, ஏகாதிபத்தியங்கள் திகைக்கும் அளவிற்கு வளர்ந்தது.

 

உலகத்தில் முதன் முதலாக ஒரு நாட்டில் மார்க்ஸிசத்தின் பொதுவான தத்துவங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன சமூகத்தில் இருந்த பகை முரண்பாடுகள் அழிக்கப்பட்டு சோஷலிசம் கருக்கட்டத் தொடங்கியிருந்தது. இந்த நிலையில் உலகம் மறுபடி ஒரு அழிவைச் சந்தித்தது. இராண்டாம் உலக யுத்தம் அரங்கேறியது. இந்த நிலையில் 2 அவுன்ஸ் பாணை மட்டுமே உணவாக உட்கொண்டிருந்த சோவியத் மக்களின் மிகப் பெரும் தியாக யுத்தம், ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியால் நடத்தப்பட்டது. இந்த மக்களின் அளப்பொரும் தியாகங்களினால் மட்டுமே உலகம் அழிவின் விளிம்பிலிருந்து இழுத்தெடுக்கபட்டது. இந்தக் கட்டத்தில் சோவியத் பொருளாதாரம் இராணுவமயமானதாக்கப்பட்டது. நாட்டின் அனைத்துச் செயற்பாடுகளும் இராணுவத் தன்மை கொண்டதாக்கப்பட்டது. தேசத்தின் ஒழுங்கமைப்பு முழுவதுமே ஒரு இராணுவ ஒழுங்கமைப்புக்கு ஒத்திருந்தது. இந்த நிலையில் கட்சி, அனைத்தையும் நிர்வகிக்கும் ஒரு அமைப்பாக மாற்றப்பட்டது. இதனால் கட்சியையும் நாட்டையும் நிர்வகித்த ஸ்டாலினது கைகளில் மொத்த அதிகாரங்களும் குவிந்து போனது. இந்த நிலையில் லெனினால் முன்னமே விமர்சிக்கப்பட்ட ஸ்டாலினின் தான்தோன்றித்தனமான போக்குகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். இதில் இரண்டு முக்கியமான பாதிப்புகள் நிகழ்ந்திருக்கலாம்.

 

(1) கட்சியினதும் தேசத்தினதும் நிர்வாக ஒழுங்கமைப்பு.

(2)பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்தும்.

 

முதலாவதாக, கட்சியின் இந்த இராணுவத் தன்மையான ஒழுங்கமைப்பு எந்த அளவுக்கு முக்கியமானதென்பது ஆய்வுக்குரியதே! இரண்டாவதாக சோவியத்தில் புரட்சியின் வளர்ச்சிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, கிழக்கு ஜரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் உருவாகியிருந்த புரட்சிகர சூழலை வளர்த்தெடுப்பதற்க்கு ஏன் கொடுக்கப்படவில்லை அல்லது எந்தளவிற்கு கொடுக்கப்பட்டது என்பதும் ஆய்விற்குரியதே!

 

இவ்வாறான தவறுகளை விமர்சிக்கிறோம் என்பதற்காக, ஸ்டாலினின் மாபெரும் தத்துவங்களையும் உலக மக்களுக்கு ஸ்டாலின் ஆற்றிய சேவைகளையும் மறுக்கின்றோம் என்று அர்த்தப்படுத்தக் கூடாது. இவை தவிர சோவியத்தில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்களுக்கு ஒத்த அதன் கலாச்சார மாற்றங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட சமூகத்தின் அரசியல் பொருளாதார நிலைமைகளின் பிரதிபலிப்பே, ஆனால் கலாச்சாரம், சமூகத்தின் அரசியல், பொருளாதார நிலைமைகளின் மீது பெரும் செல்வாக்கு வகிக்கிறது. (மாவோ)

நாம் ஒதுக்கி அப்புறப்படுத்த விரும்பும் பழைய கலாச்சாரம், நமது நாட்டின் பழைய அரசியல் பொருளாதார அமைப்பில் இருந்து தனித்துப் பிரிக்க முடியாது என்பதும், நாம் உருவாக்க முனையும் புதிய கலாச்சாரமானது புதிய அரசியல், புதியபொருளாதாரம் ஆகியவற்றிடமிருந்து தனித்து பிரிக்க முடியாது எனபதும் மிகத் தெளிவாகும். பழைய அரசியலும், பழைய பொருளாதாரமுமே பழைய கலாச்சாரத்தின் அடிப்படையாகும். அதே போல் புதிய அரசியலும் புதிய பொருளாதாரமுமே புதிய கலாச்சாரத்தின் அடிப்படையாகும்.(மாவோ)

 

மூன்றாம் உலக நாடுகளில் நிலப்பிரபுத்துவ பொருளாதார அமைப்பு நிலவிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்திலேயே அங்கு ஏகாதிபத்தியங்களால் முதலாளித்துவம் திணிக்கப்பட்டது. அப்போது முதலாளித்துவம் தனக்கே உரித்தான சில முற்போக்கு அம்சங்களையும் சேர்த்தே கொண்டுவந்தது. எல்லோருக்கும் தொழில் வாய்ப்பு, எல்லோருக்கும் கல்வி, விரும்புபவர் விரும்பிய உடையை அணிதல், விரும்பிய இடத்தில் விரும்பியவர் வாழுதல் என்ற கோஷங்களை முன் நிறுத்தியது. குறிப்பிட்ட சாதியினருக்குக் குறித்த தொழில், குறித்த மேலானோருக்கு மட்டும் கல்வி என்று ஒழுங்கமைக்கப்பட்ட சமூக அமைப்பானது இந்த ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க சுரண்டலுடன் கூடவே வந்த முற்போக்கான அம்சங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தது. உயர்த்தப்பட்டோர் மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டோர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் உருவாகியிருந்த தேவைகளின் அடிப்படையில் சமனான கல்விவாய்ப்புக்களை எல்லா மட்டத்திலிருந்தோரும் பயன்படுத்தினர். ஒரளவு திறமை அடிப்படையிலான தொழில் வாய்ப்புகள் உருவாகின. ஆனால் மீண்டும் பணம் படைத்தோரிடமே அதிகாரங்கள் குவிந்திருந்தன. தீர்மானிக்கும் சக்தியாக அவர்களே விளங்கினார்கள். இதனால் முன்னைய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் பிழையான பகுதிகள் அழியாமலும், முதாலாளித்துவத்தின் சில பகுதிகளைச் சேர்த்துக்கொண்டதுமான ஒரு கூழான புதிய சமூக அமைப்பு ஒன்று உருவாகியது. இது முற்றிலுமான நிலப் பிரபுத்துவக் கலாச்சார அம்சங்களைக் கொண்டதாகவோ இருக்கவில்லை. புரட்சிக்கு முந்திய சோவியத்ய+னியன் முற்றாக முதலாளித்துவம் வளர்ச்சியடையாத, முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நிலையில் இருந்த ஒரு நாடாக இருந்தது. எனவே அது முதலாளித்துவத்தின் முற்போக்கான அம்சங்களைக் கூட அது வரை கண்டிருக்கவில்லை. நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தில் இருந்து முற்றாக விடுபட்டிருக்கவில்லை. இந்த நிலையில் தான் சோவியத்தில் சோஷலிசப் புரட்சி அரங்கேறியது. இந்த சோஷலிசப் புரட்சி ஏற்படுத்திய அரசியல், பொருளாதார சமூக மாற்றத்திற்கு ஒத்ததான கலாச்சார மாற்றமும் சோவியத்தில் எந்த அளவிற்கு முக்கியத்துவப்படுத்தப்பட்டது என்பதையும் கருத்தில் கொண்டே சோவியத்தின் தோல்வி சம்மந்தமான ஒரு ஆய்வை பூரணப்படுத்த முடியும். முற்றாக முதலாளித்துவம் வளர்ச்சியடையாத சூழலில் முதலாளித்துவக் கலாச்சாரத்தின் முற்போக்கான அம்சங்களைக் கூடக் கண்டிராத ஒரு மக்கள் கூட்டம் கம்யூனிசக் கலாச்சாரத்தை நோக்கி வளர்த்;தெடுக்கும் போது தோன்றக் கூடிய இந்த பிரச்சனைகளை நடந்து முடிந்த சில தர்க்கங்கள் கலாச்சார வெளிப்பாடுகளுக்கூடாக நாம் காணமுடியும். பெருவீத சாகுபடிக்கு எதிரான விவசாயிகளின் தப்பெண்ணம் இன்றும் கூட நீடிக்கின்றது. பெரிய பண்ணை இருக்குமானால் அவன் ஒரு பண்ணையாளனாகவே மறுபடியும் ஆகிவிட முடியும் என்று கருதுகிறான். ஆனால் பெருவீத சாகுபடி முறை பற்றிய விவசாயியின் கருத்து ஒருவித பகைமை உணர்ச்சியுடனும் நிலப்பிரபுக்கள் எவ்வாறு மக்களை ஒடுக்கினார்கள் என்பதின் நினைவுகளோடும் பந்தமுடையது. அந்த உணர்வு இன்னும் நீடிக்கின்றது. அது மறைந்து விடவில்லை இங்கு நிலைமையின் மெய்யியல்பு காரணமாகவே பலவந்த முறைகளால் எதையும் சாதிக்க முடியாது என்ற உண்மைக் குறிப்பாயும் அடிப்படையாகவும் கொண்டு நாம் செயற்படவேண்டும். (லெனின்)

 

இவ்வாறான மனநிலைகள் லெனின் காலத்திலிருந்தே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. இவை தவிர ஸ்டாலின் காலத்தில் தடை செய்யப்பட்ட ஒபெரா நாடகப்பாணியிலான இசைகளிலும் அக்கால கட்டங்களில் உள்ள ரஷ்சிய திரைப்படங்கள் சிலவற்றிலும் பெண்கள் தொடர்பானதும் குடும்பம் தொடர்பானதும் எனப் பல கலாசாரப் பிரச்சனைகள் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் லெனின் காலத்தில் மூச்சுவிடும் நேரம் என்று வர்ணிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. முதலாளித்துவம் முற்றாக வளர்ச்சியடையாத ஒரு சமூகத்தில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான வளர்ச்சியின் மட்டத்தில் வித்தியாசம் இருக்கும். முதலாளித்துவ சந்தையை நோக்கி இறுக்கமாகப் பிணைக்கப்படும் போது இந்த வித்தியாசங்கள் அகற்றப்படும். இவ்வாறான முதலாளித்துவம் வளர்ச்சியடையாத சூழலில், இந்த வளர்ச்சி மட்ட வித்தியாசங்களை அகற்றும் ஒரு இடைக்காலமாக முதலாளித்துவச் சந்தையின் சில பகுதிகளைத் தொடர்ந்து பேணுதல் என்ற கொள்கை முன்வைக்கப்பட்டது. இதன் தாக்கங்களும் இதன் பிறகு ஸ்டாலினால் முன்வைக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளும் ஆய்விற்குரியனவே!

 

ஸ்டாலின் மறைவிற்குப் பின்னைய திரிபுவாத கட்சிகள் பற்றியும், அதன் தவறான போக்குகள் பற்றியும், சீனக் கம்யூஸ்ட் கட்சி ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்திருந்த போதிலும், சோவியத்தின் இந்தத் திடீர் மாற்றம் எவ்வாறு நிகழ்ந்து இருக்கக் கூடும் என்பது பற்றி சரியான ஒரு ஆய்வு முன் வைக்கப்படவில்லை. உபரி தானிய சுவீகரிப்பிற்குப் பதிலாகப் பண்ட வடிவிலான வரியை அறவிடுவது என்ற நடவடிக்கையைப் பின்பற்றிய போது லெனின் பின்வறுமாறு கூறுகின்றார் உலகப் புரட்சி தயக்கமடைவதன் காரணமாக ரஷ்சியாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நீடித்துப் பேணி வைத்திருப்பது சாத்தியமல்ல. இதை நாம் தெளிவாக உணர வேண்டும்.

 

இவ்வாறான ஒரு சாத்தியமல்லாத தன்மையை வெற்றி கொள்வதற்காகவே, உபரித் தானியத்தை சுவீகரிப்பதற்குப் பதிலாக, தனிப்பட்ட பரிவர்த்தனையை அனுமதிக்கின்ற பண்ட வடிவிலான வரிவிதிப்பு முறையை அரசு ஏற்படுத்திற்று. இது ஒரு இடைக்கட்ட நடவடிக்கையாகவே கைக்கொள்ளப்பட்டது. விவசாயிகளில் பெரும் பகுதியினரான நடுத்தர விவசாயிகளைத் திருப்தி செய்ய வேண்டும் என்று கூறுகிற இந்த அறிக்கை கட்டற்ற பரிவர்த்தனையை அனுமதிப்பதை நியாப்படுத்துகின்றது. மேலும் இது பற்றிக் கூறுகையில், உபரி சுவீகரிப்பு என்பது எல்லா உபரிகளையும் பறிமுதல் செய்தலையும் கட்டாய அரசு ஏகபோகம் நிலைநாட்டப் படுவதையும் உணர்த்துகிறது. நாம் வேறு வழியில் எதையும் செய்ய முடியாது. நமது தேவை மிகவும் மிகுதியானது. தத்துவார்த்த முறையில் கூறினால் சோஷலிசத்தின் நலன்களில் நோக்கு நிலையிலிருந்து அரசு, ஏகபோகம் ஆகச் சிறந்த இன்றியமையாத அமைப்பு முறையல்ல என்கிறது. இங்கே உலகப் புரட்சி மேலும் தாமதமடைந்தும் லெனினுக்குப் பிந்திய பொருளாதாரக் கொள்கைகளில் அரசு ஏகபோகத்தை அதிகளவு வளர்க்குமளவிற்கு இருந்த பரிவர்த்தனை முறை விநியோக முறை சார்ந்த குறைபாடுகள் தொடர்பான பிரச்சனைகளையும் சோவியத் தொடர்பான ஆய்வில் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

1991 ஆண்டு ஆவணி 19ம் திகதியில் இருந்து 61 மணித்தியாலங்கள் மட்டுமே நீடித்த இந்த திடீர் சதி முயற்சி சோவியத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்க முடியாத ஒன்றாகும். சோவியத்தில் கோர்பச்செவ் ஏற்படுத்திய மாற்றத்திற்கு எதிரான மறுபடி கட்சி சார்ந்த ஒரு சில நபர்களின் சர்வாதிகாரத்தை ஏற்படுத்த முயன்ற குழுவே இச்சதி முயற்சியின் சூத்திரதாரிகளாவர். ஆனால் இன்றைய நிலையில் சோவியத்தின் உருக்குலைந்த ஏகாதிபத்தியத் தன்மை வாய்ந்த அரசு தனது இருப்பை நிலைநிறுத்த முடியாமல் போனது இயல்பானதே. இன்றைக்கு சோவியத்தின் பெரும் பகுதி சந்தைகளை அமெரிக்காவும் ஜப்பானும் ஜெர்மனியும் போட்டிபோட்டுக் கொண்டு ஆக்கிரமித்து விட்டன.

 

இன்றைக்கு உலகில் பெரிய பங்குச் சந்தையை யப்பானே கொண்டுள்ளது. உலகின் பெரிய எட்டு வங்கிகளில் ஏழு யப்பானுடையதாகும். உலகில் 100 முன்னணி வங்கிகளில் 25 வங்கிகள் யப்பானுடையதாகும். சோவியத்தின் மூன்றாம் உலக நாடுகளிற்கான ஆயுத வினியோகத்தில் பெரும் பகுதியை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. யப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்த உக்கிரமான பொருளாதாரப் போட்டிக்குள் சோவியத் யூனியன் அடியுண்டு போனதின் ஓரு தவிர்க்க முடியாத விளைவு தான் இன்றைய சோவியத்யூனியன். இதன் வெளிப்பாடுதான் பெரஸ்ர ரொய்காவும், கிளாஸ்னோவ்வும். ஜக்கிய ஜரோப்பாவும் கூட ஜப்பானுடைய இந்த வளர்ச்சி இனிமேலும் பல வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளையும் சோவியத்தின் வறுமை நிலைக்கு தள்ளி விடலாம்.

 

லெனின் தலைமையிலான கட்சி ஜேர்மனியுடன் ஒப்பந்தம் செய்வதை எதிர்த்த ட்ரொஸ்கி குழுவினரும் வேறு குழுக்களும் இது உலகப்புரட்சிக்குச் செய்யும் துரோகமென முழங்கினர். இது குறித்து லெனின் விளக்குகையில் உலகில் சோஷலிசப் புரட்சி சாத்தியாகுமெனில் முதலில் ரஷ்சியா பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார். ரஷ்சியா தோல்வியடையுமாயின் அது உலகப்பாட்டாளி வர்க்கத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையீனத்தைத் தோற்றுவிக்கும் என்றார். ஆனால் ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர் ரஷ்சியா தோல்வியடைந்துவிட்டது. அது கோர்பச்செவ் காலத்தில் நடந்தது அல்ல. எனவே இன்றைக்கு இது குறித்து நம்பிக்கை இழப்பவர்கள் வரலாறு குறித்து நம்பிக்கையற்றவர்களாக இருக்க முடியும்.

 

ஆனால் இன்றைக்கு இத் தோல்வி குறித்து ரஷ்யா உள்ளேயே ஆக்கபூர்வமான கருத்து விவாதங்களும் நம்பிக்கை தரும் முன்னறிவிப்புகளும் ரஷ்யாவினுள் இருந்தே வெளிவருகின்றன. இன்றைக்குப் பொருளாதார நெருக்கடிக்கு கோர்பச்செவ்வைக் காரணம் காட்டி யெல்ரினைத் தூக்கி நிறுத்தும் முதலாளித்துவப் பச்சோந்திகளின் நாடகங்கள் நீண்ட காலத்திற்கு நிலைக்க முடியாத அளவிற்கு ரஷ்யாவினுள் பொருளாதார நெருக்கடிகள் வளர்ந்து விட்டன. பெரஸ்ரொய்க்காவிற்குப் பிறகு ர்;ஷ்யாவின் சந்து பொந்துகளெல்லாம் திறக்கப்பட்ட அமெரிக்கச் சாப்பாட்டுகடையான (Mc Donalds) இல் இன்னும் நீண்ட காலத்திற்குப் பணம் படைத்தவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்க முடியாது.

 

ரஷ்ய மக்கள் அங்கிருந்த அரசுகளிற்கு எதிராகவே கோஷம் எழுப்புகின்றார்கள். கம்யூனிச சித்தாந்தத்திற்கு எதிராக அல்ல. லெனின் சிலைகள் ரஸ்யாவில் உடைக்கப்பட்ட பிறகு லெனினின் பூதவுடலும் அழிக்கப்படலாம் என்ற பயத்தில் முண்டியடித்துக் கொண்டு அஞ்சலி செலுத்தச் சென்ற மக்கள் கூட்டம் தான் கோர்பச்செவ்வை விடுவிக்கவும் செய்தது.

 

எப்போது உடைபடுமென ஒரு உடைபடாமல் கிடந்த லெனின் சிலையைச் சுற்றிப் பத்திரிகையாளர்கள் காவல் நின்ற போது, காரில் வந்திறங்கிய ஒரு பெண் அந்த சிலைக்கு மலர்களைத் தூவிவிட்டு ரஷ்யர்கள் துரோகிகள் அல்லர் என்று ஒரு சொற்பொழிவையே ஆற்றிய போது அந்த மக்கள் கூட்டம் மௌனமாக கலைந்து சென்றது.

 

இரண்டாவது மாநிலமான உக்ரேயின் மாநிலத்தின் முதல்வர் இந்த ஆட்சி ஜார் ஆட்சிக்கு ஒத்ததே என கூறி அறிக்கை விடுத்தார்.

 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி காட்டரின் ஆலோசகர் சிமின நியூபிளசெயிகன் சதி பற்றி குறிப்பிடுகையில் சோவியத்தில் மாநிலங்கள் பிரிகின்றன கோர்பச்சொவ்வின் ஆட்சி அழியப்போகின்றது. ரஷ்ய சம்மேளனத் தலைவர் பெரிஸ் யெல்ஸ்ரினின் செல்வாக்கு அதிகரிக்கிறது சோவியத் யூனியன் அழியப்போகிறது. விரைவில் புரட்சி ஒன்றை எதிர்பார்க்கலாம். அது மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று அச்சம் தெரிவிக்கின்றார்.

 

கோடிக்கணக்கான கட்சி ஊழியர்களையும் ஒரு சோஷலிச வரலாற்றுப் பாரம்பரியத்தையும் கொண்ட மக்கள் கூட்டத்தை சோவியத் யூனியன் கொண்டுள்ளது. திரிபுவாதிகளின் திரிபுகள் எல்லாம் பொருளாதார நெருக்கடிகளைக் கொண்டு வந்து விட்டது. இந்த நிலையில் சோவியத்தில் மறுபடி ஒரு புரட்சிக்கான முன்னறிவிப்புகள் கேட்கின்றன. இது வெகு தொலைவில் இல்லையென்றே நம்பலாம்.

 

இந்த நிலையில் சமூக உணர்வுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் ஸ்தாபனங்களும் சோவியத் யூனியன் சம்மந்தமாக ஆய்வொன்றை தீவிரத்துடன் மேறகொள்வது மிகவும் அவசியமானது. அதுவும் செய்திகளைக் கூடியளவு சேகரித்துக் கொள்ளக் கூடிய ஜரோப்பிய சூழலில் வாழ்கின்ற நாம் இதனை எமது எதிர்கால சமூகத்திற்கு வழங்குவது மிகவும் பயனுள்ளதாக அமையும். ஜரோப்பாவில் இருந்து வெளிவருகின்ற அரசியல் சஞ்சிகைகள் இந்தப் பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டால் நாளைய புதிய சமுதாயத்துக்கு கவிதைகளையும் சிறுகதைகளையும் விட மேலும் வலுவுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.

 

 

குடும்ப ஆட்சி, தனிமனித சர்வாதிகாரம் ஆட்சி வடிவங்களாக பல நாடுகளில் நடந்தன. நடக்கின்றன. இதில் நமது நாடும் விதி விலக்கல்ல. இச் சர்வாதிகாரிகள் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளைக் கூட அளிக்க மறுப்பதால் இங்கே வர்க்க சார்பின்றி மக்கள் போராட வேண்டிய நிர்ப்பந்தம் இயல்பாகிறது. இச் சூழ்நிலையின் முரண்பாட்டை தெளிவான நெறிப்படுத்தலினூடாக அரசை நோக்கிப் போராடும்படி மக்களை வழி நடத்த தேச விடுதலைக் கட்சிகள் காத்திருப்பதும், சூழ்நிலையைப் பயன்படுத்தி இக் கட்சிகள் தேசத்தின் விடுதலையில் கணிசமான முன்னேற்றம் அடைகின்றனர் அல்லது அடுத்த கட்ட நகர்வுக்கு அனுபவத்தைப் பெறுகின்றனர் என்பதைப் பல நாடுகளின் வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது.

 

நமது தேசத்தைப் பொறுத்தவரையில் தேச விடுதலை பற்றிய நோக்குள்ள முனைப்புக்கள் ஆங்காங்கே உதிரியாயிருப்பது நமக்குத் தெரிகின்ற போதிலும், தற்போதைய அரசுக்குள்ளும், பாராளுமன்றத்திலும் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டால் வெளிவந்து கொண்டிருக்கும் கொலைகளையும், தேசத்துரோகத்தையும், சர்வாதிகாரத்தின் உச்சநிலை ஆட்சியையும், நாட்டின் கடைசிக் குடிமகனும் ஆளும் கும்பல் பற்றி அறிந்து கொண்ட இவ்வேளையில், இவ் முரண்பாட்டைப் பயன்படுத்த எந்தவொரு தேச விடுதலை ஸ்தாபனமும் இல்லாதிருப்பதை விடுதலையை நேசிக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் உணரவேண்டிய நேரமிது.

 

இலங்கையில் தொடர்ச்சியான சிங்களப் பேரினவாத ஆட்சியால் இன முரண்பாடு கூர்மையடைந்துள்ள இவ்வேளையில் ஜனாதிபதி ஆட்சி முறைக்கெதிராகவும், பிரேமதாஸா மீதான அரசியல் குற்றப் பட்டியலையும் சி.சு.க, ல.ச.ச.க, ம.ஐ.மு, .ஐ.சோ.மு, ஈ.ம.வி.மு, இ.தொ.கா. ஆகிய கட்சிகளோடு இணைந்து ஐ.தே.க யின் முக்கிய தலைவர்களான காமினி திசநாயக்கா, அத்துலத்முதலி ஆகியோர் உட்பட46 ஐ.தே.க உறுப்பினர்களும் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் சமர்ப்பித்ததற்கான அரசியல் பின்னணியை ஆராய்வது அவசியமானதே.

 

ஜே.ஆர். ஜனாதிபதியாக இருந்த போது கட்சிக்குள்ளும் பராளுமன்றத்திலும் இரண்டு சம எண்ணிக்கையுள்ள குழுக்கள் ஜே.ஆர் இற்கும் பிரேமதாஸாவுக்கும் இருந்தது. பிரேமாவுக்கு அப்போது நாட்டின் தலைவர் என்னும் பதவி இல்லாமலிருந்த போதிலும், நடுத்தர வர்க்கத்தையும், அதற்கு கீழ்ப்பட்டவரையும் கவரும் தன்மை கொண்ட சிங்களமொழி பேச்சுவன்மையும் தனது வளர்ச்சிக்காக அவர் உழைத்த சளையாத சாகச உழைப்புமேயாகும்.

 

இதன் நிமித்தம் ஜே.ஆர். அரசில் பிரதமர் பதவியும், பின்னர் ஜனாதிபதி வேட்பாளராகவும் ஜே.ஆர் உம் கட்சியும் விரும்பியோ விரும்பாமலோ அனுமதிக்க வேண்டியேற்பட்டது என்றால் அது மிகையாகாது. (பிரேமதாஸாவின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜே.ஆர். தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஐ.தே.க. வுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டதாகவும், பிரேமதாஸா என்னும் பெயரை உச்சரிக்காமலே அதிருப்தியைக் காட்டியதாகவும் கூறப்படுகிறது.) கட்சியில் அரைவாசிப்பேரும் ஜே.ஆரும் தனக்கு நேர் எதிராக முன்கூட்டியே இயங்குவதை அறிந்து கொண்ட பிரேமதாஸா, பாராளுமன்றத் தேர்தலா ஜனாதிபதித் தேர்தலா முதலில் நடத்துவது என்னும் இழுபறியில் ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாயிருந்து, அனைத்து அதிருப்தியாளர்களையும் தனது வெற்றிக்காக உழைக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தினார் என்பது சரியானதே. ஜே.ஆர் குழுவில் இருந்த லலித், காமினி ஆகியோருக்கும் பிரோமதாஸாவுக்கும் குழுநிலைவாத முரண்பாடு இருந்தபோதும் குறைந்த பட்சம் பிரதமர் பதவியையாவது எட்டிப் பிடித்தால் அடுத்த கட்டம் நாட்டின் தலைவர் பதவிக்குத் தாவிவிடலாம் என்று காத்திருந்தோர் மிகவும் ஏமாந்து போயினர். ஜே.ஆர், பிரேமா ஆகியோரின் சிங்களப் பேரினவாத, மேற்கத்தைய பொருளாதார ஆட்சி அமைப்பு முறையில் சகல உடன்பாடுகளும் உள்ள லலித் குழு, அதிகாரத்தில் பங்கோ, எதிர்கால வாரிசு என்னும் இடமோ, கிடைக்காததால், பாராளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் தேவை, ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் அதிகாரம் ஒரு தனிமனிதனிடம் போய் விடுகிறது, இங்கே ஜனநாயகம் இல்லை, சர்வாதிகாரம் நடக்கின்றது என்று சந்தர்ப்பவாதத் தனத்தோடு கூச்சலிடுவது மக்களின் அழிவு பற்றி அறிந்து கொள்ளாத கேலி அரசியலாகும். இலங்கையில் சிங்கள அரசியல் தலைமைகள் அனைத்தும் அரசு மாற்றம், தேர்தல் பிரச்சாரம், புரட்சி, கட்சியின் தலைமை மாற்றம், எதுவாக இருந்தாலும் இனவாதம் பேசிச் சாதிப்பது மரபுவழிச் செயல் போன்றே பேசிச் சாதித்துள்ளனர். இதே வழிமுறையை நழுவவிடாது லலித் குழுவினரும் இப்போது அதிகாரப் போட்டிக்குப் பயன்படுத்துவது இவர்களின் அரசியல் மரபாக இருந்த போதிலும் தொடர்ந்தும் இனங்களுக்கிடையிலான விரிசலையும் தேசிய இனங்களின் உரிமைகட்கெதிராகவும் எடுக்கும் நடவடிக்கையாக அனைத்து மக்களும் இவர்களை இனம் காணவேண்டும்.

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகார வரம்புகளைத் தீர்மானிப்பதில் ஜே.ஆர் தன்னோடு ஏற்படுத்திக் கொண்ட குழுவில் பிரோமதாஸா, லலித், கமினி ஆகியோரை இச் சூழ்நிலையில் குறிபிடத் தக்கவர்களாகக் கருதலாம். ஜே.ஆர் தலைமையில் நடந்த பௌத்த சிங்களப் பேரினவாத அரசில் அதிமுக்கியமாக சுயநிர்ணய உரிமை கோரும் தமிழ் தேசிய இனத்தை ஒடுக்கக் கூடிய சட்டங்களும் தொழிலாளர்கட்கும், பத்திரிகையாளர், எதிர்க்கருத்துள்ளோரை ஒடுக்கும் சட்டங்களும்(6வது திருத்தச்சட்டம்) இயற்றப்பட்டதோடு, இவர்கட்கெதிராக அரச இயந்திரமும் படைகளும் முடுக்கி விடப்பட்டன. வேலை நிறுத்தம் செய்யும் உரிமை ரத்து(ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் செய்ததால் 40,000 பேர் வேலை இழந்தனர்) அப்பாவித் தமிழ் மக்கள் மீது குண்டு வீசித் தாக்கி பல்லாயிரம் பேரைக்கொன்றொழித்தமை, தமிழ்ப் பிரதேசங்கள் மீது திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்தியபோதெல்லாம் பாராளுமன்றத்தில் எந்தவித விவாதங்களோ சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுயமான முடிபுகளை அறியாமல் ஜனாதிபதி செயலகம் காலால் இட்டபணியை தலையால் செய்து முடித்த குழுவினர் தான் தற்போது ஜனநாயகத்துக்காக இனவாதம் பேசுகின்றனர் என்பதை நாம் உணர வேண்டும்.

 

அதன் பின் வந்த பிரேமதாஸாவின் தலைமையின் கீழும் தெற்கில் பல்லாயிரம் இளைஞர்கள் பழைய ரயர்கட்கு இரையாகிய போதும் (எம்.பி) சரத்முத்தட்டுகம படுகொலை செய்யப்பட்டபோதும், ரிச்சர்ட் டீ சொய்சா கொலை செய்யப்பட்ட போதும், பிரேமதாஸாவின் வேண்டுதலுக்காக விடுதலைப் புலிகள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்றோரை கொலை செய்த போதும், ரோகண விஜவீர, உபதிஸ்ச கமநாயக்கா போன்றோரைக் கொலை செய்த போதும், விஜய குமாரணதுங்க கொலை செய்யப்பட்ட போதும. இவ் ஆளும் கும்பல் கருத்தொருமித்தவர்களாகவே இருந்தனர். பாராளுமன்ற ஆட்சி அமைப்பில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் கருத்துக்கள் கணிசமான அளவு செயல் வடிவம் பெறாமல் போன போதும் முக்கியமான விடயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி அமைப்பு முறை, சிறுபான்மைத் தேசிய இனங்களின் அபிலாசைகளை பூரணமாக நிராகரிக்கும் தனி மனித பலம் கொண்டவை என்பதில் லலித் குழு உட்ப்பட அனைத்து ஆட்சியாளர்கட்கும் மறைமுகமான திருப்தி அப்போது இருந்ததை நாம் மறந்து விடலாகாது.

 

சிறுபான்மைத் தேசிய இனங்களின் எதுவித நலனையும் கவனத்திற் கொள்ளாது இனவாதிகள் தொடர்ந்தும் இனவாதத்தையே பேசும் போதும் ஈ.ம.பு.வி.மு. யினர் தொடர்ந்தும் தங்கள் இந்திய எஜமானர்களின் கட்டளைப்படியே நடந்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. பிரேமதாஸா மீதான அரசியல் குற்றப் பட்டியலை விவாதத்திற்கெடுத்து நிச்சயம் விவாதிக்கப் போவதாகச் சூழுரைத்த சபாநாயகர் மொகமட், சட்டமா அதிபரின் ஆலோசனை தன்னைக் கட்டுப்படுத்தப் போவதில்லை என்று ஜனாதிபதிக்கு மூன்று கடிதங்களையும் அனுப்பி உறுதியளித்தார்.

 

பிரேமதாஸாவின் அதிரடி அரசியல் நடவடிக்கையின் வெள்ளோட்டமாகத் தொண்டமானைத் தூதனுப்பியவுடன், சபாநாயகருக்கு அரசியமைப்பும், பாராளுமன்ற ஒழுங்கு முறையும் மறந்து உயிர் பற்றிய பயம் வந்துவிட்டது போலும்......... சட்டமா அதிபரின் ஆலோசனையை ஏற்று மனு காலாவதியாகிவிட்டதாக அறிவித்துள்ளார். அரசியல் அமைப்புச் சட்டம், பாராளுமன்ற மரபு அனைத்தையும் பிரேமதாஸா தன் முன் மண்டியிட வைத்துள்ளார் என்பது சரியானதே.

 

பிரேமதாஸாவின் மனித உரிமை மீறல், அரசியல் குற்ற நடவடிக்கை, அதிகார துஷ்பிரயோகம், படுகொலைகள், லஞ்ச ஊழல் ஆகியவை அனைத்தும் அம்பலத்திற்க்கு வந்துள்ள இவ்வேளையில், இந்த அதிருப்தி நிலையை வென்றெடுத்து தனது பதவியையும் அரசையும் நிலைக்க வைக்க, தமிழ் மக்கள் மீதும் குடாநாட்டின் மீதும் உக்கிரமான இராணுவத் தாக்குதலில் ஈடுபட்ள்ளார்.

 

இந்த நடவடிக்கையால் ஏற்படும் அப்பாவி தமிழ் மக்களின் கொலைகளைக் கண்டு சிங்கள மக்கள் திருப்தியடைவார்களானால் அவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதோடு பிரேமதாஸாவின் அரசும் நீடிக்கும்.

 

ஒரு மாபெரும் சர்வாதிகாரி நமது நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் மக்கள் முற்று முழுதாக அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.

 

கடுமையான போர்ச் சூழலில் வாழும் இன்றைய தமிழ் மக்களின் வாழ்நிலையில் இருந்து ஒப்பிட்டு ரீதியாகப் பார்க்கும் போது, சிங்கள மக்கள் ஓரளவு அமைதியாக சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்றே சொல்லலாம். இதைத் தமிழர்கள் வாழும் போர்ச் சூழலில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பொருளாதார அழிப்புக்களை கவனத்தில் கொள்ளாது, இனவாத இராணுவத்தினாலும், பாசிச இயக்கங்களாலும் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ்மக்களினதும் போராளிகளினதும், மொத்த எண்ணிக்கையிலும் பார்க்க ஒப்பிட்டளவில் இருமடங்கு சிங்கள இளைஞர்களை பிரேமதாஸா அரசு குறுகிய காலத்துக்குள் கொன்றொழித்ததை நாம் அனைவரும் அறிவோம். இது எப்படி நடந்தது. இவ்வளவு மனித உயிர்களையும் எதிர்யுத்தம் புரியாமலே பலி கொடுக்க வேண்டிய பிற்போக்குத்தனமான ஏற்பாட்டிற்கு காரணமாயிருந்த சக்திகளின் அரசியல் பின்னணி என்ன என்பதை ஆராய்வதை சற்று ஒதுக்கிவைத்து நோக்குமிடத்து, அரசின் ஓடுக்குமுறைக்கெதிரான போர்க் குணாம்சம் கொண்ட அனைத்து சக்திகளையும் அழிப்பதில் ஆளும் வர்க்கம் கட்சி பேதமின்றி ஒருமித்திருந்ததை நிருபிக்க அச் சூழ்நிலையில் அனைத்துக் கட்சியின் சலனமற்ற மௌனம் ஒரு சான்று. சூழ்நிலைக்கேற்றவாறு கதை சொல்லும் பிரேமதாஸா நிலபிரபுத்துவ சமுகம், வர்க்க முரண்பாடுகள் பற்றியெல்லாம் பேசத் தொடங்கி இருப்பதை நோக்கிமிடத்து இலங்கை மக்களை வெறும் கால்நடைகளாக எண்ணுகின்றனர் போலும்.

 

தற்போது பாராளுமன்றத்திலும் வெளியேயும் உள்ள அனைத்துப் பிற்போக்குக் கட்சிகளும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தங்கள் வர்க்கநலன் கருதியும், குழு நலனுக்காகவும் உழைக்கும் மக்களை காட்டிக் கொடுத்து வந்துள்ளதோடு இன முரண்பாடுகளையும் கொதிநிலையில் வைத்திருப்பதை விரும்புகிறது.

 

ஆகவே, இன முரண்பாடுகளுக்கு மூலக் காரணியாயுள்ள அனைத்து அம்சங்களையும் உழைக்கும் மக்களைக் கூறுபோடவும் வர்க்க ரீதியான ஒருமைப்பாடு ஏற்படாமலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்க்காகவே பயன்படுத்துகின்றனர். ஆகவே, தமிழ் மக்களின் தேசவிடுதலைப் பாதையில் ஏற்பட்டிருக்கும் சீரழிவுச் சூழ்நிலையையும், அன்னிய சக்திகளின் தலையீட்டையும், சிங்கள முற்போக்கு சக்திகளும் உழைக்கும் மக்களும் தமிழ் மக்களின் தோல்வியாகப் பார்க்காது சமூக பொருளாதார அரசியல் நோக்கோடு அணுக வேண்டும். அப்போதே ஒடுக்குமுறைக்குகெதிரான இப் போராட்டத்தில் அனைத்துப் பாஸிசத்தையும் வென்று உழைக்கும் மக்களுக்காகிய தமிழீழத்தின் அடித்தளத்திலே முழு இலங்கையின் உழைக்கும் மக்களுக்காகிய விடுதலையை வெல்ல முடியும் என்று கூறக் கூடிய காலகட்டத்தில் நாமுள்ளோம். இந்நாள் வரும் வரை இவ் ஆட்சியாளர்களின் அரசியல் நாடகங்களை நாம் பார்த்தேயாகவேண்டும்.

 

இனவாத அரசு, சீனச் சோசலிச அரசின் ஆயுதத் துணை கொண்டு விடுதலை கோரும் தமிழ் மக்களை அழிக்கும் இக் காலத்தில் பீக்கிங்கில் உள்ள தங்கள் எஜமானர்களைத் தட்டிக்கேட்க வக்கற்ற புதிய ஜனநாயகக் கட்சினர், கொழும்பிலே(சீன சார்பு) கம்யூனிஸ்சக் கூடாரம் அடித்து விட்டு, ஜக்கிய முன்னணி அமைத்து ஸ்ரீ.ல.சு.கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர ஐரோப்பிய நாடுகளில் பிரச்சாரம் செய்யும் இவர்கள், தற்போது நடந்த பாராளுமன்றப் புரட்சியைக் கண்டு குதூகலித்திருக்க கூடும்! ஆனால் ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கமல்ல.

 

 

மக்கள் விரோத தமிழ் தேசியவாதிகளினால் உருவாகும் பேரினவாதத்தின் வெற்றி, தமிழினத்தின் அடிமைத்தனத்தின் மேலான வரலாறாகின்றது. இப்படி இவர்களால் தமிழ் இனம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்தவர்கள் யார்?

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE